ஹராரே ஒரு நாள் போட்டி- கோலி, பதான், அஸ்வினால் சரிவை சமாளித்த இந்தியா

ஜிம்பாப்வேயிடம் அடுத்தடுத்து 2 முறை தோல்வியைச் சந்தித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியுமா என்ற கேள்விக்குறியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா.
இந்த நிலையில் இலங்கையுடன் இன்று மோதுகிறது இந்தியா. இதில் பெரும் வித்தியாசத்தில் ஜெயித்தால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை.
ஹராரேவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை இந்தியாவை பேட் செய்யப் பணித்தது.
இந்திய அணியில் இன்று முரளி விஜய் நீக்கப்பட்டு நமன் ஓஜா சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதில் ஆர்.அஸ்வின், பங்கஜ் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
வழக்கம் போல தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தைத் தரவில்லை. நமன் ஓஜா, ஒரு ரன் எடுத்த நிலையில் வீழ்ந்தார். சற்று பொறுப்பாக ஆட முயன்ற திணேஷ் கார்த்திக் 27 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் விராத்கோலி மிகவும் நிதானத்துடன் ஆடி அரை சதம் போட்டார். 95 பந்துகளைச் சந்தித்த அவர் 68 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அவரும் யூசுப் பதானும் சேர்ந்து ஆடி ரன்களை மெதுவாக உயர்த்தினர். பதான் அதிரடியாக ஆடினார். 41 பந்துகளில் 42 ரன்களை அவர் சேர்த்தார். பின்னர் வந்த ரோஹித் சர்மா 32 ரன்களைக் கொடுத்தார்.
சுரேஷ் ரெய்னாவும், ரவீந்திர ஜடேஜாவும் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. இந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக ஆடி கடைசி நேரத்தில் 38 ரன்களைக் குவித்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 32 மட்டுமே.
இறுதியில், 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 268 ரன்களை எடுத்தது இந்தியா.
இலங்கைத் தரப்பில் மிராண்டோ 3 விக்கெட்களைச் சாய்த்தார். கலுஹலமுல்லா 2 விக்கெட்களையும், குலசேகரா, பெரைரா, தி்ல்ஷான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications