வேண்டும் என்றே 'நோ பால்'- ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை கிரிக்கெட் வாரியம்

இலங்கையில் நடந்து வரும் முத்தரப்புத் தொடரில் முதல் போட்டியில் இந்தியா, நியூசிலாந்திடம் 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் நேற்று நடந்த 2வது போட்டியில் அது இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடியது. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் பிரமாதமாக பந்து வீசினர்.
இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. இதனால் 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை.
இந்தியத் தரப்பில் பிரக்யான் ஓஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார். பிரவீன் குமார், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. ஆசிஷ் நெஹ்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கியது இந்தியா. தொடக்க ஆட்டக்காரர் திணேஷ் கார்த்திக் தடுமாறியபடி ஆடினார். 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். அதேபோல விராத் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் டக் அவுட் ஆக இந்தியா அதிர்ந்தது.
இருப்பினும் ஷேவாக்கும், கேப்டன் டோணியும் இணைந்து மூழ்கத் தொடங்கிய கப்பலை நிலைநிறுத்தி ரன் குவிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் மெதுவாக ஆடி வந்த ஷேவாக் பின்னர் அதிரடிக்குத் தாவினார். படு வேகமாக ஆடிய அவர் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டோணியும் அவுட் ஆகாமல் 23 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதை 34.3 ஓவர்களில் சாதித்தது இந்தியா.
ரந்தீவின் 'சின்னப்புள்ளைத்தனம்':
நேற்றைய போட்டியின்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரந்தீவ் சின்னப்புள்ளைத்தனமாக நடந்து கொண்டார்.
35வது ஓவரின் தொடக்கத்தில் இந்தியா 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஷேவாக் 99 ரன்களுடன் இருந்தார். அவர் ஒரு ரன் எடுத்தால் சதம் கிடைக்கும் என்ற நிலை.
இந்த நிலையில் ரந்தீவ் பந்து வீச வந்தார். முதல் பந்தை ஷேவாக் எதிர்கொண்டார். அதை அவர் அடிக்கவில்லை. பந்தை விக்கெட் கீப்பர் சங்கக்காரா பிடிக்கத் தவறியதால் அது நேராக பவுணட்ரிக்குப் போய் விட்டது. இதையடுத்து ஷேவாக் சதமடிக்கவும், இந்தியா வெல்லவும் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது.
அடுத்து வீசப்பட்ட 2 பந்துகளையும் ஷேவாக் சந்தித்தார். இருப்பினும் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. 4வது பந்தை ஷேவாக் சந்தித்தார். அப்போது பந்து லாவகமாக வந்ததால் அதைத் தூக்கி அடித்தார். பந்து சிக்சருக்குப் பறந்தது. ஆனால் நடுவர் அதை நோபால் என்று கூறி விட்டார்.
இதனால் ஷேவாக் அதிர்ச்சி அடைந்தார். அவரது சத வாய்ப்பு பறிபோனது, அதேசமயம், இந்தியா வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ரந்தீவ் வேண்டும் என்றே கிரீஸை விட்டு வெளியில் வந்து நோபாலாக வீசினார் என்று கிரிக்கெட் வர்னணையாளர்கள் சரமாரியாக விமர்சித்துத் தள்ளி விட்டனர். ஷேவாக் சதம் அடித்து விடாமல் தடுக்கவே இவ்வாறு அவர் நடந்து கொண்டதாகவும் விமர்சித்தனர்.
ஷேவாக்கும் கூட ரந்தீவை தனது பேட்டியின்போது விமர்சித்தார். அவர் கூறுகையில், ஒரு இளம் வீரர் இவ்வாறு நடந்து கொண்டது அழகல்ல. ஒரு வீரர் 99 ரன்களில் இருக்கும்போது அவரை சதம் எடுக்க விடாமல் தடுக்க இதுபோல பவுலர்கள் நடந்து கொள்வது புதிதல்ல. ஆனால் வேண்டும் என்றே நோபால் போடுவது கிரிக்கெட் அல்ல. வளரும் வீரரான ரந்தீவ் இதுபோல செயல்படக் கூடாது என்றார் சற்றே கோபத்துடன்.
ஆனால் ரந்தீவ் வேண்டும் என்றே பந்து வீசவில்லை என்று இலங்கை கேப்டன் சங்கக்காரா கூறினார்.
இந்த நிலையில் நேற்று போட்டி முடிவடைந்ததும், ஷேவாக்கின் அறைக்குச் சென்ற ரந்தீவ் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதேபோல இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து இந்தியகிரிக்கெட் அணியின் மேலாளர் ரஞ்சீவ் பிஸ்வாலை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் நிஷாந்த் ரணதுங்கா, நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ரந்தீவ் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரியநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
அடுத்த போட்டி
முத்தரப்புத் தொடரில் அடுத்த போட்டி 19ம் தேதி இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இடையே நடைபெறவுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:40 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications