மொஹாலி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் கேப்டனாக திரும்ப கே எல் ராகுல் வெற்றியை ருசித்து இருக்கிறார். ராகுல் இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக முதிர்ச்சியாக செயல்பட்டார்.
பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் மாற்றுவது, சரியான நேரத்தில் சரியான பவுலருக்கு ஓவர் கொடுப்பது என்பதில் ராகுல் கை தேர்ந்து விட்டார். இந்த நிலையில் பேட்டிங்களும் அபாரமாக கடைசி வரை நின்று அரை சதம் அடித்த ராகுல் வெற்றியையும் உறுதி செய்தார்.

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய கே எல் ராகுல் நான் கேப்டனாக இருப்பது இது முதல் முறை கிடையாது. யாரேனும் இல்லை என்றால் இந்த பொறுப்பு என்னை தேடி வந்துவிடும். இதற்கு நான் பழகிக் கொண்டு விட்டேன். இந்த பொறுப்பும் எனக்கு பிடித்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் காட்டிய உத்வேகம் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் கொழும்புவில் விளையாடிவிட்டு இந்தியா வந்ததும் இங்கு சொர்க்கம் போல் எங்களுக்கு இருந்தது.
முதலில் வெயில் இருந்தாலும் போகப் போக வெப்பம் எங்களை சுட்டெரித்தது. இதனால் உடல் அளவில் நாங்கள் கடும் சவால்களை சந்தித்தோம். களத்தில் நிற்கவே கடினமாக இருந்தது. எனினும் எங்களுடைய உடல் தகுதியை நாங்கள் சிறப்பாக பேணிக் காப்பதால் எங்களால் களத்தில் சிறப்பாக செயல்பட முடிந்தது. எங்கள் அணியில் இன்று ஐந்து பந்துவீச்சாளர்கள் தான் இருந்தார்கள்.
அதனால் அனைவருமே 10 ஓவர்கள் வீச வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது கில் மற்றும் ருதுராஜ் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். எனினும் கில் ஆட்டம் இழந்த பிறகு போட்டியில் நாங்கள் நெருக்கடியை சந்தித்தோம். ஏனென்றால் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் ஆட்டம் இழந்தால் எப்போதுமே பின்னால் வருபவர்களுக்கு சிக்கல்தான். எனினும் நானும் சூரிய குமாரும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம்.
ஒரு வீரராக இது போன்ற கடின சவால்களை சந்திக்க ஆசைப்படுகிறேன். நானும் சூரிய குமாரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது எந்த ஷாட்டை அடிப்பது, சிங்கிள்ஸ் எப்படி ஆடுவது என்பது குறித்து நாங்கள் பேசி அதை போல் செயல்பட்டோம். அதிரடியாக ஆடி விக்கெட்டுகளை இழக்க நாங்கள் விரும்பவில்லை. போட்டியை கடைசி வரை கொண்டு சென்று வெற்றி பெற வேண்டும் என நாங்கள் பேசி வைத்து விளையாடினோம் என்று ராகுல் கூறினார்.