மும்பை : 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை வென்று தந்த பிரித்வி ஷா சீனியர் கிரிக்கெட்டிலும் பெரிய லெவலில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுப்மன் கில் அந்த இடத்தை பிடித்து விட்டார். ஆனால் பிரிதிவி ஷா இன்னும் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கூட பிரித்வி ஷா இடம்பெறவில்லை. இது குறித்து பேசிய பிரித்வி ஷா, நான் எப்போதும் அதிரடியாக விளையாட முயற்சி செய்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னுடைய ஆட்டத்தை நான் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். என்னால் புஜாரா போல் பொறுமையாக விளையாட முடியாது. அதேபோல் புஜாராவால் என்னை போல் அதிரடியாக விளையாட முடியாது. இதனால் என்னை இந்த அளவுக்கு கொண்டு சென்ற விஷயங்களை நான் மாற்ற விரும்பவில்லை. எடுத்துக்காட்டாக அதிரடியாக விளையாடி தான் நான் இந்த அளவுக்கு வந்திருக்கிறேன்.
அதை நான் மாற்ற மாட்டேன். இப்போது நான் விளையாடும் அனைத்து ஆட்டங்களையும் மிக முக்கியமான போட்டியாக தான் நினைக்கிறேன். துலீப் கோப்பையாக இருந்தாலும் சரி மும்பை அணிக்காக விளையாடுவதாக இருந்தாலும் சரி அனைத்து போட்டிகளிலும் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கிறேன்.
இன்னும் எப்போதுமே நம்மால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. ஆனால் அதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதும் இரண்டும் வேறு வேறு விஷயமாகும். பந்துவீச்சாளர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் நாம் விளையாட வேண்டும். அப்போதுதான் நமக்குத் தேவையான பந்தை அவர் வீசுவார்.
எனக்கு சிவப்பு நிற கிரிக்கெட் கடந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. ரஞ்சி கிரிக்கெட்டில் 370 ரன்கள் குவித்தேன். ஆனால் ஐபிஎல் போட்டி முற்றிலும் எதிர்மறையாக அமைந்தது. வெறும் 20 ஓவர் தான் இருக்கிறது. அதில் நாம் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். கங்குலி, ரிக்கி பாண்டிங்,பிரவீன் ஆம்ரே போன்ற ஜாம்பவான்களிடம் நான் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறேன். சிவப்பு நிற கிரிக்கெட் தான் சவால்கள் கொடுக்கும். அதுதான் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் பிரித்வி ஷா கூறியுள்ளார்.