கோலாலம்பூர்: 2025 ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியை 5-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து, தோல்வியே சந்திக்காமல் 'குழு பி' (Pool B) பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, 9 புள்ளிகளுடன் கம்பீரமாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது இந்திய ஜூனியர் அணி.

இன்றைய ஆட்டத்தின் நட்சத்திர நாயகனாக ஜொலித்தவர் இந்திய வீரர் மன்மீத் சிங். போட்டி அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அவர், சுவிட்சர்லாந்துக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்து தனக்கும், இந்திய ரசிகர்களுக்கும் மறக்க முடியாத பரிசை அளித்தார்.
ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே தில்ராஜ் சிங் கொடுத்த அற்புதமான பாஸை, லாவகமாகத் தட்டிவிட்டு முதல் கோலை பதிவு செய்தார் மன்மீத். இதன் மூலம் இந்தியாவுக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது. தொடர்ந்து 11-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
மன்மீத் சிங் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை மற்ற வீரர்கள் கோட்டையாக மாற்றினர். 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, டிராக்-பிளிக்கர் சாரதா நந்த் திவாரி கோலாக மாற்றினார். இதனால் முதல் கால் பகுதியிலேயே இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு, 28-வது நிமிடத்தில் அர்ஷ்தீப் சிங் தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 4-0 என வலுவான நிலையில் இருந்தது. ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் மீண்டும் சாரதா நந்த் திவாரி பெனால்டி கார்னர் மூலம் தனது இரண்டாவது கோலை பதிவு செய்து, அணியின் வெற்றியை 5-0 என உறுதி செய்தார்.
கோல்கீப்பரின் அபார செயல்பாடு
முன்கள வீரர்கள் கோல் மழை பொழிந்தாலும், பின்களத்தில் இந்திய கோல்கீப்பர் பிரிண்டே தீப் சிங் சுவராக நின்று சுவிட்சர்லாந்தை விரக்தியடையச் செய்தார். குறிப்பாக, மூன்றாவது கால் பகுதியில் சுவிட்சர்லாந்துக்கு ஒரு 'பெனால்டி ஸ்ட்ரோக்' வாய்ப்பு கிடைத்தது. கோல் விழும் என்று எதிர்பார்த்த நிலையில், பிரிண்டே தீப் சிங் தனது காலால் அதைத் தடுத்து நிறுத்தி 'கிளீன் ஷீட்' சாதனையைத் தக்கவைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. நடப்பு சாம்பியன் ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகளும் தங்கள் பிரிவுகளில் முதலிடம் பிடித்து நேரடியாகக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. பெல்ஜியம் மற்றும் நியூசிலாந்து அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
காலிறுதி ஆட்டத்திலும் இதே உத்வேகத்துடன் ஆடி, ஜூனியர் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.