மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி, காயம் காரணமாக தற்போதைய டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
கடந்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஆல் ரவுண்டராக ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி, மான்செஸ்டரில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகக் காயமடைந்தார்.

ஜூலை 20 ஆம் தேதி உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நிதிஷ் குமார் ரெட்டிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட ஸ்கேன்களில், அவரது முழங்காலில் தசைநார் கிழிவு (ligament damage) ஏற்பட்டது தெரியவந்தது. இதன் காரணமாக, அவர் இத்தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய அணி வீரர்கள் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியினரை சந்தித்தபோது, நிதிஷ் குமார் ரெட்டி அதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் மருத்துவ பரிசோதனையில் இருந்திருக்கலாம் என தற்போது தெரியவந்துள்ளது.
லார்ட்ஸ் டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து ஒரு முக்கிய பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணிக்கு உதவினார். மேலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு, இங்கிலாந்தின் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களையும் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்கச் செய்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தினார்.
நிதிஷ் குமார் ரெட்டியின் காயம் இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் நிலையில், மேலும் சில காயங்களும் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், லார்ட்ஸ் டெஸ்டின் போது இடது கையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட வலியாலும், அர்ஷ்தீப் சிங் கையில் ஏற்பட்ட வெட்டுக் காயத்தாலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மான்செஸ்டர் டெஸ்டில் அவர்கள் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக அன்ஷுல் கம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நிதிஷ் குமார் ரெட்டிக்கு மாற்று வீரராக, ஏற்கனவே அணியில் உள்ள மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஷர்துல் தாகூர் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தற்போது 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில், முக்கிய வீரர்கள் காயமடைந்திருப்பது அணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.