மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தற்போது ஆஸ்திரேலிய தொடருக்காக தயாராகி வரும் நிலையில் அவருக்கு மிகப்பெரிய ஒரு இடி வந்து இறங்கி இருக்கின்றது. சூரியகுமார் யாதவ் தற்போது டி20 கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு இடம் வழங்கப்படும். அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதேபோன்று இந்திய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் விளையாடினார். அதிலும் அவர் சொற்ப ரன்களின் ஆட்டம் இழந்ததார்.

அதன் பிறகு சூரியகுமார் யாதவ் டெஸ்ட் பக்கமே அழைத்து வரப்படவில்லை. இந்த நிலையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான மும்பை அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் சூரியகுமார் யாதவ் மும்பை அணியில் இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
மும்பை அணியின் தேர்வு குழு தலைவர் சஞ்சய் பாட்டில், தீலிப் வெங்சர்கார் ஆகியோர் மும்பை அணியை அறிவித்தனர். இதில் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு இடம் கிடைத்திருக்கிறது. இதேபோன்று மும்பை அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த தருணத்தில் சூரியகுமார் யாதவ், மும்பை அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டு இருக்கிறது. 35 வயதான சூரியகுமார் டி20 கிரிக்கெட்டில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவரை இனி ரஞ்சி அணியில் சேர்க்க வேண்டாம் என்ற முடிவில் மும்பை நிர்வாகம் எடுத்திருக்கிறது.
இதன் மூலம் 15 ஆண்டு காலம் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி வந்த சூரிய குமார் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 86 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் 14 சதம், 30 அரை சதம் என 5758 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் சராசரி 42 ஆகும். கடைசியாக கடந்த சீசன் அரையிறுதியில் விதர்பாவுக்கு எதிராக சூரியகுமார் விளையாடினார்.
இதில் முதல் இன்னிங்சில் 23 ரன்கள், 2வது இன்னிங்சில் டக் அவுட்டானார். அந்த சீசனில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடி 109 ரன்கள் எடுத்திருந்தார். இதில் அவரது சராசரி 21 என்ற அளவில் இருந்தது. இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்த போதிலும் சூரிய குமார் யாதவ் மும்பை டெஸ்ட் அணியில் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.