சென்னை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று 48 மணி நேரம் ஆகப்போகிறது. ஆனால் இன்றும் ரசிகர்கள் அந்த உற்சாக கடலில் இருந்து மீளவே இல்லை. தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்ல நினைவாக இந்தத் தொடர் நிச்சயம் இருக்கும் என்பது உறுதி.
ஆனால் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை
இதனால் இந்தியா குறித்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச் மற்றும் ரிஷப் பண்ட் காயம் ஏற்பட்டு விட்டதாக போட்டியை தாமதப்படுத்திய யூத்தி என விஷயங்களை பட்டியலிட்டு குறை கூறுகின்றனர்.

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடத்திய நேர்காணலில், சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் ராபின் உத்தப்பா மற்றும் கிரிக்கெட் நிபுணர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்று பேசிய ராபின் உத்தப்பா ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரனாக இந்த வெற்றி நினைத்து நான் திரும்பி திரும்பி அழுததாக குறிப்பிட்டார்.
தற்போது உள்ள இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் கடந்த 10 ஆண்டுகளாக கேலி கிண்டலுக்கு ஆளாகியதாக சுட்டிக்காட்டிய உத்தப்பா பெரும் சுமை தற்போது குறைந்து இருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அஸ்வின் 10 ஆண்டுகளாக இந்த வெற்றிக்காக ஒவ்வொரு இந்தியரும் காத்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.
மேலும் போட்டி முடிந்தவுடன் தமது மனைவியை கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக அஸ்வின் கூறினார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் நேரலையில் எழுத்து மூலம் கேள்வி அனுப்பினார். அதில் சூரிய குமார் யாதவ் பிடித்தது கேட்ச் கிடையாது தானே என்று அவர் கேட்டிருந்தார். இதனால் கடுப்பானார் ராபின் உத்தப்பா, கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் நன்றாக பேசுவார்.
இதனால் தமிழிலே சில கருத்தை கூறினார். யார்ரா நீங்க எல்லாம்? எங்கிருந்துடா வரீங்க! யாராவது வெற்றி பெற்றால் உடனே அது சரி இல்லை, இது சரியில்லை என்று குறை கூறுகிறீர்களே. உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா என்று சென்னை தமிழில் கூறப்படும் *த்தா என்று வார்த்தையை பயன்படுத்தினார். இந்த வார்த்தையை கேட்டவுடன் அஸ்வின் விழுந்து விழுந்து சிரித்தார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.