மும்பை : இந்திய டி20 அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மூத்த வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா டி20 அணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிசிசிஐ அடுத்து 2024 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் முதற்கட்டமாக, உலகக்கோப்பையில் ஆடிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தற்காலிகமாக இளம் வீரர்கள் கொண்ட அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்திய டி20 அணி நிச்சயம் இளம் வீரர்கள் கொண்ட அணியாக இருக்க வேண்டும் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற 35 வயதை ஒட்டி இருக்கும் மூத்த வீரர்களை அணியில் இருந்து நீக்கி விட்டு அதிக அளவில் 30 வயதுக்கு உட்பட்ட வீரர்களை அணியில் சேர்த்து அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு முன் இளம் அணியை தயார் செய்ய வேண்டும் என்பதே பிசிசிஐயின் திட்டமாக உள்ளது.
தற்போது டி20 அணியில் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் ரன் மெஷினாக வலம் வரும் விராட் கோலியையும் அணியில் இருந்து நீக்குவது சரியான முடிவாக இருக்குமா? என்ற கேள்வி இருந்தாலும், இளம் வீரர்கள் கொண்ட அணியை டி20 அணிக்கு தேர்வு செய்யும் போது நிச்சயம் இந்திய அணி புத்துணர்ச்சி பெறும் என பிசிசிஐ கருதுகிறது. ஆனால், அதை சரியாக கையாளும் பயிற்சியாளர் குழுவையும் கட்டமைக்க வேண்டும் என்பதே அவர்கள் முன் உள்ள சவால்.
இது சரியா? இல்லையா? என்பது 2007 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியில் நடந்த மாற்றத்தை வைத்துப் பார்த்தால் நமக்கு புரியும். 2007 காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், ஜாகிர் கான் போன்ற மூத்த வீரர்கள் ஒதுங்கிக் கொள்ள 29 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர்கள் அணி அப்போது முதல் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்று உலகக்கோப்பை வென்றது. அப்போது புதிய கேப்டன், இளம் வீரர்கள் என இந்திய அணிக்கு புத்துணர்ச்சி பாய்ச்சப்பட்டு அது டி20 அணி மட்டுமின்றி, ஒருநாள் அணியிலும் மாற்றங்களை கொண்டு வந்து 2011 உலகக்கோப்பை வெல்லவும் காரணமாக அமைந்தது.
அதே போன்ற ஒரு மாற்றத்தை இப்போது டி20 அணியில் செய்தால் அது 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் பிரதிபலிக்கும் என பிசிசிஐ எதிர்பார்க்கிறது. 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் ஆடுவார்களா? என்பது கேள்விக் குறியே. கோலிக்கு மட்டும் சிறிய அளவில் வாய்ப்பு உள்ளது. ஆனால், முகமது ஷமி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு நிச்சயம் வாய்ப்பு இல்லை.
இந்த மாற்றத்தின் முதல் பகுதியாக நிச்சயம் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் நீக்கப்பட்டு விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. அடுத்து டி20 அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற கேள்வி உள்ளது. சூர்யகுமார் யாதவ் தற்காலிகமாகவே ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு வரும் போது அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அவரே டி20 அணியின் நிரந்தர கேப்டனாகவும் வாய்ப்பு உள்ளது.