மும்பை: டி20 உலகக் கோப்பை 2026 தொடங்க இன்னும் 6 தினங்களே உள்ள நிலையில், இந்திய அணி தங்கள் இறுதி இருத்தரப்பு தொடரை விளையாடி முடித்துள்ளது. அமெரிக்காவுடனான போட்டிக்கு முன், பிப்ரவரி 4 அன்று தென்னாப்பிரிக்காவுடன் ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மோதவுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 என வென்ற பிறகு, சில முக்கிய கேள்விகளுக்குப் பதில்கள் கிடைத்துள்ளன.
இந்தத் தொடரில், இந்திய அணிக்கு எழுந்த மிக முக்கியமான கேள்வி தொடக்க ஆட்டக்காரர் யார் என்பதுதான். முதல் நான்கு போட்டிகளில் சஞ்சு சாம்சன் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. சொந்த மண்ணிலும் அவருக்குக் கை கொடுக்கவில்லை; தொடர்ச்சியாக ஒற்றை இலக்க ரன்களையே எடுத்தார்.

ஆனால் சாம்சனுக்கு நேரடி போட்டியாளர் இஷான் கிஷன், தனது முதல் டி20 சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதனால், அபிஷேக் ஷர்மாவின் தொடக்க பாட்னர்ஷிப் குறித்து இனி கவலைப்படத் தேவையில்லை. சுப்மன் கில்லுக்கு மாற்று வீரராக இருந்த சாம்சன், இப்போது கிஷனுக்கு மாற்று வீரராக இருப்பார்.
சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் குறித்த கவலை முன்னதாக பெரிதாக இருந்தது. நியூசிலாந்து தொடருக்கு முன் ஃபார்ம் அவுட்டில் இருந்த அவர், அந்தத் தொடரில் 5 போட்டிகளில் மூன்று அரை சதங்களை அடித்து அசத்தினார். இந்திய டி20 கேப்டன் 80.66 சராசரியுடனும், 196.74 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் ஆடி, ஃபார்ம் குறித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நியூசிலாந்து தொடருக்கு முன் காயமடைந்த முக்கிய வீரர்களில் திலக் வர்மாவும் ஒருவர். அவர் உலகக் கோப்பைக்குத் தயாராகிவிடுவார் என செய்திகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 7 அன்று அமெரிக்காவுடன் இந்தியாவின் உலகக் கோப்பை பயணம் தொடங்குவதற்கு முன், அவர் இந்தியாவுக்காக ஒரு பயிற்சி ஆட்டத்திலும், இந்தியா 'A’ அணிக்காக ஒன்றிலும் பங்கேற்பார்.
இதில் ஒரு சவால் என்னவென்றால், திலக் வர்மா டிசம்பர் 19க்குப் பிறகு எந்த சர்வதேசப் போட்டியிலும் ஆடவில்லை. இதனால், ஆட்டப் பயிற்சி இல்லாதது அவரது ஆட்டத்தைப் பாதிக்கலாம்; இது இந்திய அணியின் பேட்டிங் சமநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
வாஷிங்டன் சுந்தர் வரும் பிப்ரவரி 4 அன்று உடல் தகுதி குறித்து சோதனை செய்யப்படும். அதன் பின்னரே உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது உறுதி செய்யப்படும். வாஷிங்டன் உடல் தகுதியுடன் இல்லை என்றால், பராக் அவரை மாற்றுவார். ஆனால், பராக் அக்டோபர் 2024க்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவில்லை.
பும்ராவின் பயன்பாடு மற்றொரு கவலைக்குரிய விஷயம். 2025 ஆசியக் கோப்பைக்குப் பிறகு, பவர்பிளே ஓவர்களில் பும்ராவை இந்தியா பயன்படுத்துவதில்லை என முடிவு செய்துள்ளது. அவர் முதல் 6 ஓவர்களில் ஒரு ஓவர் மட்டுமே வீசுகிறார். அதிலும் பெரும்பாலும் 5வது அல்லது 6வது ஓவரில். புதிய பந்தை ஹர்திக் பாண்டியா எடுத்து வீசுகிறார்.
ஹர்திக்கின் ஸ்விங் திறனைப் பயன்படுத்தவும், அவரை மிடில் ஓவர்களில் பயன்படுத்தாமல் இருக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இது பும்ராவின் தாக்கத்தைக் குறைக்கிறது. புதிய பந்தின் ஸ்விங்கையும் சீம் திறனையும் அவர் பயன்படுத்த முடிவதில்லை. மேலும், செட் ஆன பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே அவர் வீசுகிறார். இது சரியான முடிவா என்ற கேள்வி எழுந்துள்ளது.