கொழும்பு: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் இருந்து முதல் அணியாக இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி, கடந்த பிப்ரவரி 15 அன்று கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இதை உறுதி செய்தது.
டி20 தரவரிசையில் உலகின் நம்பர் 1 அணியான இந்தியா, இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் நான்காவது குரூப் ஏ போட்டி நெதர்லாந்துக்கு எதிராக புதன்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

சூப்பர் 8 சுற்றில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள அணிகள் பற்றி தற்போது தெரியவந்துள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் இரண்டு முறை கோப்பையை வென்ற வலுவான மேற்கிந்தியத் தீவுகள். இதில் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் கடும் சவால் இந்தியாவுக்கு அளிக்கும்.
இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்காவை பிப்ரவரி 22 அன்று சந்திக்கிறது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ரீப்ளேவாக இருக்கும். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது இரண்டாவது சூப்பர் 8 போட்டியில் ஜிம்பாப்வேயை பிப்ரவரி 26 அன்று எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கும்.
இந்தியாவின் மூன்றாவது மற்றும் இறுதி சூப்பர் 8 போட்டி மார்ச் 1 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியும் இரவு 7 மணிக்கே தொடங்கும். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற இந்தப் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது மிகவும் அவசியம்பாகும்.
டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற, இந்திய அணி குறைந்தபட்சம் இரண்டு சூப்பர் 8 போட்டிகளில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டி மார்ச் 8 அன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறினால், முதல் அரையிறுதிப் போட்டி மார்ச் 4 அன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி மார்ச் 5 அன்று மும்பையின் வான்கடே மைதானத்திலும் நடைபெறும்.
ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால், அவர்களது அரையிறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அந்த இறுதிப் போட்டியும் கொழும்பில் தான் நடத்தப்படும். இல்லையெனில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.