மகளிர் டி20 உலககோப்பை:வாழ்வா? சாவா? ஆட்டத்தில் ஆஸி.யுடன் இந்தியா மோதல்..வெல்வோம் என ஷாபாலி நம்பிக்கை
லண்டன்: மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்நிலையில், வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த புதிய திட்டங்களை வகுக்காமல், தங்களின் எளிய ஆட்ட முறையையே இந்தியா பின்பற்றும் என்று நட்சத்திர வீராங்கனை ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.
குழு ஏ பிரிவில் இருந்து அரையிறுதிக்குச் செல்லும் அணிகளை தீர்மானிக்கப்போகும் கடைசி இரண்டு லீக் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. இதில் ஆறு புள்ளிகளுடன் உள்ள தென்னாப்பிரிக்கா, நான்கு புள்ளிகள் பெற்றுள்ள வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டியில், ஆறு புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி, எட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.இந்தப் போட்டி இந்திய நேரப்படி ஞாயிற்றுகிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்கா வங்கதேசத்தை வீழ்த்தினால், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவை கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். அதே நேரத்தில், ஆஸ்திரேலியா இப்போட்டியில் தோல்வியடைந்தாலும் சிறந்த ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
"ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்" - ஷஃபாலி வர்மா நம்பிக்கை
இது குறித்து பேசிய ஷஃபாலி வர்மா, "ஆஸ்திரேலியா ஒரு உலகத்தரம் வாய்ந்த அணி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்களை நாம் இதற்கு முன்பு தோற்கடித்ததே இல்லை என்று கூற முடியாது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரில் நாம் அவர்களை வீழ்த்தினோம், அது நமக்கு பெரும் நம்பிக்கையைத் தருகிறது" என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது. எதிரணியினரைப் பற்றிய புரிதல் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று ஷஃபாலி நம்புகிறார்.
"நாங்கள் பல ஆண்டுகளாக அவர்களுக்கு எதிராக விளையாடி வருகிறோம். அவர்களின் பந்துவீச்சாளர்கள், பலங்கள் மற்றும் திட்டங்களை நாங்கள் நன்கு அறிவோம். எனவே, நாம் ஆட்டத்தை எளிமையாக வைத்துக்கொண்டு, நமது சொந்த பலத்தை நம்பி விளையாடுவது முக்கியம்" என்று அவர் கூறினார்.
மாறிய அணுகுமுறையும் சிறந்த பார்மும்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தனது அணுகுமுறையை மாற்றியமைத்த 22 வயதான ஷஃபாலி, மீண்டும் தனது சிறப்பான பார்முக்கு திரும்பியுள்ளார். கடைசியாக விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்களை விளாசியுள்ள அவர், தொடரின் தொடக்கத்தில் தான் அதிகமாக யோசித்ததாக ஒப்புக்கொண்டார்.
"என்னுடைய பேட்டிங்கில் பல விஷயங்கள் மேம்பட்டுள்ளன. பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு வரை நான் அதிகமாக யோசித்துக்கொண்டிருந்தேன். முதல் பந்தை எப்படி விளையாடுவது, இரண்டாவது பந்தில் எந்த ஷாட் அடிப்பது என்று ஓவராக திட்டமிட்டேன். ஆனால், இப்போது எனது இயல்பான ஆட்டத்தை நம்பி விளையாடத் தொடங்கியுள்ளேன்," என்று ஷஃபாலி வர்மா கூறினார்.


Click it and Unblock the Notifications

