மொகாலி: இந்திய ஸ்பின்னர்களின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 184 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 17 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடிவருகிறது. 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 142 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
மொகாலியில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாசில் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

டீ இடைவேளை முடிந்த சில நிமிடங்களிலேயே 201 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது. முரளி விஜய் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்த நிலையில், பிற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த தென் ஆப்பிரிக்காவின் பேட்ஸ்மேன்களால் இந்திய சுழற்பந்து வீச்சு நெருக்கடியை தாங்க முடியவில்லை. எனவே வரிசையாக நடையை கட்ட ஆரம்பித்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அந்த அணி 184 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 17 ரன்கள் முன்னிலை பெற்றது.
தென் ஆப்பிரிக்க தரப்பில் டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 63 ரன்களும், ஆம்லா 43 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இந்திய தரப்பில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி 51 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ரவீந்திர ஜடேஜா 3, அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். வேகப்பந்து வீச்சாளர்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. 17 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2வது இன்னிங்சை ஆடத்தொடங்கியது.
இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. எனவே முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து இந்தியா, 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஷிகர்தவான் முதல் இன்னிங்சை போலவே 2வது இன்னிங்சிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். முரளி விஜய் 47 ரன்களில் அவுட் ஆனார்.
சிறப்பாக ஆடி அரை சதம் விளாசிய புஜாரா 63 ரன்களுடனும், கேப்டன், கோஹ்லி 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் வெர்னன் பிளான்டர் மற்றும் இம்ரான் தாஹீர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டத்தில் இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், அதிக ரன்களை குவித்து தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி தர இந்தியா முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.