தரம்சாலா: இந்திய அணி வீரர்களை ஹோட்டலில் தனித்துவிட்ட பின், ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு தரம்சாலா மலைகளில் ட்ரெக்கிங் சென்றுள்ள வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மலைகளுக்கு நடுவில் உள்ள தரம்சாலா மைதானத்தில் விளையாடுவதே வீரர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இந்தியாவின் மிக அழகிய மைதானங்களில் ஒன்றான தரம்சாலா மைதானத்தை கண்டு வெளிநாட்டு வீரர்களும் வியப்பை வெளிப்படுத்துவார்கள்.

தரம்சாலா மைதானத்தில் இந்திய அணி வென்ற நிலையில், அடுத்ததாக லக்னோ மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த போட்டிக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், வீரர்களுக்கு 2 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இந்திய வீரர்கள் யாரும் பயணம் மேற்கொள்ளவில்லை. அதனால் ஹோட்டல் அறைகளிலேயே நேரம் செலவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய வீரர்களை தனியே விட்டு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு தனியாக ட்ரெக்கிங் மேற்கொண்டுள்ளது. தரம்சாலா மைதானத்திற்கு அருகே உள்ள மலைகளில் ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர், திலீப், பரஸ் ஆம்ரே, த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் குழுவினர் உள்ளிட்ட அனைவரும் ட்ரெக்கிங் மேற்கொண்டுள்ளனர்.
இந்த பயணத்தின் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் விளையாடி வருவதால், மலைகளில் ட்ரெக்கிங் செய்வது காயத்தை ஏற்படுத்தலாம் என்பதால், பயிற்சியாளர்கள் மட்டும் வந்துள்ளனர். அந்த வீடியோவில் ராகுல் டிராவிட் பேசுகையில், மலைகளில் ஏறி மேல் வருவது நிச்சயம் சவாலான ஒன்று என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் வீரர்களை அழைத்து வர முடியவில்லை. ஆனால் நிச்சயம் இந்திய வீரர்களும் இந்த அனுபவத்தை அடுத்த முறை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை போன்ற நீண்ட தொடர்களுக்கு நடுவே வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும்2 நாட்கள் விடுமுறை கொடுத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த 2 நாட்கள் விடுமுறை வீரர்களுக்கு, அணி நிர்வாகத்திற்கும் கூடுதல் உத்வேகத்தை அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.