மும்பை: இங்கிலாந்து தொடரில் தங்களுக்கு எந்த அழத்தமும் இல்லை என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடர் குறித்து பிசசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேப்டன் பதவி கொடுத்தது தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்த கில், முதல் முறையாக இதை அறிந்தபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், இது ஒரு பெரிய பொறுப்பு. இந்த சவாலை எதிர்கொள்ள ஆவலாக உள்ளேன். பேட்டிங் நிலையை முடிவு செய்ய இன்னும் சிறிது காலம் உள்ளது, நாங்கள் ஒரு உள்-அணி போட்டியில் விளையாட உள்ளோம், பின்னர் 10 நாள் பயிற்சி முகாமை நடத்துவோம்.

எனக்கு ஒரு குறிப்பிட்ட கேப்டன்ஷி பாணி என்று எல்லாம் மனதில் இல்லை. நீங்கள் விளையாடும்போது இவை படிப்படியாக வளர்கின்றன. நான் வீரர்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அவர்கள் வசதியாக உணரும்படி செய்ய முயற்சிப்பேன். வீரர்கள் பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்,"
இங்கிலாந்தில் தனது புள்ளிவிவரங்கள் குறித்து கேள்விக்கு பதில் அளித்த கில், நிச்சயமாக நான் முன்மாதிரியாக வழிநடத்த விரும்புகிறேன். ஆனால், சராசரிகளும் புள்ளிவிவரங்களும் எனக்கு முக்கியமானவை அல்ல. பேஸ்பால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் விளையாடுகிறார்கள். இது எங்களுக்கு உற்சாகமானது. இது ஒரு சிறந்த சவால் தான்.
நாம் நமது திட்டங்களில் முனைப்பாக இருந்தால், அவர்கள் மீது அழுத்தம் ஏற்படும். விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஓய்வு குறித்து ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும் அழுத்தம் இருக்கும். இந்த இரு பெரிய வீரர்களும் நீண்ட காலம் நமக்கு பணியாற்றியுள்ளனர், அவர்களது இடத்தை நிரப்புவது எளிதல்ல. ஆனால், இது கூடுதல் சுமையாக இல்லை. இதற்கு நாம் இப்போது பழகிவிட்டோம்," என்று கில் கூறினார்.
இந்திய அணி ஜூன் 20 அன்று இங்கிலாந்துக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடரில் பங்கேற்க உள்ளது. சவாலான சூழல்களில் கில் எவ்வாறு அணியை வழிநடத்துவார் என்பது ஆர்வத்தைத் தூண்டுகிறது. இங்கிலாந்தில் கில்லின் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இல்லை; ஆறு இன்னிங்ஸ்களில் 88 ரன்கள் மட்டுமே எடுத்து, 14.66 சராசரியைப் பெற்றுள்ளார்.