மும்பை: இந்திய டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மாவுக்குப் பிறகு யார் கேப்டனாகப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பெயரும் இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவி கிடைக்காது என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. அவரது நடத்தை காரணமாக கேப்டன் பதவி அவருக்குக் கிடைக்காது எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா, சுப்மன் கில், ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இதில் சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் ஏற்கனவே டி20 அணி மற்றும் ஒருநாள் அணிகளின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரையே பிசிசிஐ எதிர்கால இந்திய அணிக்காகப் பார்க்கிறது. பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் அவரை தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். மிகக் குறைந்த போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கினாலும், ரஞ்சி டிராபியில் நடந்த சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டி யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கேப்டன் பதவி கிடைக்காது எனத் தெரிகிறது.
மும்பை அணிக்காக ஆடிய போது யஷஸ்வி ஜெய்ஸ்வால், அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே உடன் மோதலில் ஈடுபட்டார். இந்திய அணியில் இடம் பெறும் முன்னரே ஒரு முறை எதிரணி வீரரை யஷஸ்வி ஜெய்ஸ்வால் திட்டியிருக்கிறார். அதற்கு கேப்டன் ரஹானே அவரை கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சரியாக நடந்து கொண்டிருக்கிறார்.
பின்னர் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பிடித்தார். ரஹானே இந்திய அணியில் தனது இடத்தை இழந்தார். அதன் பின் மீண்டும் இருவரும் மும்பை அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடினர். அப்போது ரஹானே அந்த அணியின் கேப்டனாக இருந்தார். ஆடுகளத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிரணி வீரருடன் மோதலில் ஈடுபட்டார். அப்போது ரஹானே அவரை தடுத்து நிறுத்தினார். அப்போது முதல் ஜெய்ஸ்வால் - ரஹானே இடையில் மீண்டும் உரசல் துவங்கி இருக்கிறது.
மேலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒழுங்காக ரன் குவிக்காதது குறித்து, கேப்டன் ரஹானே மற்றும் மும்பை அணியின் பயிற்சியாளர் போட்டி முடிந்தவுடன் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் 'நான் அவர்களை விட பெரியவன்' என்ற மன நிலையில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், அவர்களுக்கு பதில் சொல்லாமல், ரஹானேவின் பையை எட்டி உதைத்துவிட்டு, ஓய்வறையை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்குத் தாவி இருக்கிறார். இந்தச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, "யஷஸ்வி ஜெய்ஸ்வாலை எப்படி இந்தியாவின் கேப்டனாக நியமிப்பது? அவர் எதிரணியோடு இதேபோல பொறுமை இழந்து நடந்து கொண்டால், அது இந்திய அணிக்கு அவமானத்தை ஏற்படுத்தாதா?'" என கேள்வி எழுப்புகின்றனர். ஜெய்ஸ்வாலின் கோபம் அவருக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி வாய்ப்பை பறித்து இருக்கிறது.