இலங்கையில் ஆடிய கடைசி 5 டெஸ்ட் மேட்ச்சும் இந்தியா வெற்றி ஆனால்.. அது நடந்து 9 ஆண்டுகள் ஆச்சு!
மும்பை: சுமார் 9 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கை மண்ணில் வரும் ஆகஸ்ட் 15 முதல் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 1985 முதல் 2017 வரையிலான 32 ஆண்டுகளில் இலங்கை மண்ணில் விளையாடியுள்ள இந்திய அணிக்கு தற்போது புதிய சவால்கள் காத்துள்ளன.
இலங்கையில் இதுவரை இந்திய அணி மொத்தம் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 9 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 8 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக, இலங்கை மண்ணில் விளையாடிய தனது கடைசி 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

ஆனால், இம்முறை விளையாட உள்ள 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட், முகமது சிராஜ் உட்பட 12 வீரர்கள் முதல் முறையாக இலங்கை மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1985-ல் கபில் தேவ் தலைமையில் முதன்முறையாக இலங்கை சென்ற இந்திய அணி தொடரை இழந்தது. பின்னர் 1993-ல் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இலங்கை மண்ணில் தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. 2001-ல் சௌரவ் கங்குலி தலைமையில் சென்ற இந்திய அணி தொடரை இழந்தது. பின்னர் 2008-ல் அஜந்தா மெண்டிஸின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமலும் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. 2010-ல் நடைபெற்ற தொடர் 1-1 என டிராவில் முடிந்தது.
இதற்கிடையில் 2015-ம் ஆண்டு கல்லே மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவே இலங்கை மண்ணில் இந்திய அணி கடைசியாக தோல்வி அடைந்தது ஆகும். அதன் பிறகு இந்திய அணி, 2015 டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், 2017 தொடரை 3-0 என்ற கணக்கிலும் முழுமையாகக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு, பல இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி முந்தைய வெற்றிகளைத் தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
