மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடுத்து விளையாட உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணி நாளை (சனிக்கிழமை, மே 24, 2025) அறிவிக்கப்பட உள்ளது. அந்த இந்திய டெஸ்ட் அணியில் இருந்து முகமது ஷமி நீக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது முழங்கால் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அளவுக்குத் தயாராகவில்லை என்றும், பிசிசிஐ மருத்துவக் குழு அவரால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது என கருதுவதால், அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக வேறு சில வேகப்பந்துவீச்சாளர்களை இந்திய தேர்வு குழு தேர்வு செய்ய உள்ளது.

முதன்மை வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 போட்டிகளிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் கூட்டணியாகப் பந்துவீசுவதற்காக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட உள்ளார். அவர்களுடன் ஹர்ஷித் ராணாவும் இடம் பெறுவார்.
ஆனால், இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக வேலை இருக்கும் என்பதால், கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் அன்ஷுல் காம்போஜை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் அன்ஷுல் காம்போஜ் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். அவர் இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்திருந்தார். அவரது பந்துவீச்சு டெஸ்ட் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருப்பதால், அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது. அவர் இந்தியா ஏ அணிக்கு எதிராகவும் விளையாட இருக்கிறார். அதில் விக்கெட்டுகள் வீழ்த்தும் பட்சத்தில், அவர் நிச்சயமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவதோடு, விளையாடவும் வாய்ப்பு உள்ளது.
மேலும், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், வேறு சில பேட்ஸ்மேன்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பளிக்கப்படாது எனவும், சர்பராஸ் கான், சாய் சுதர்சன் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.