கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் யூத் டெஸ்ட் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்களில் வென்றது.
இந்தியா மற்றும் இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்கு இடையே 2 யூத் டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. இலங்கையில் நடைபெறும் இந்தத் தொடரின் முதல் யூத் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்களில் அபாரமாக வென்றது.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 244 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் ஹரிஷ் தியாகி, ஆயுஷ் பதோனி தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 589 ரன்கள் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் அதர்வா தைடே 113 ரன்களும் ஆயுஷ் பதோனி ஆட்டமிழக்காமல் 185 ரன்களும் எடுத்து அசத்தினர். இலங்கையின் சேனரத்னே 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. நிஷான் மதுஷாகா 104 ரன்கள், நுவானிடு பெர்னார்டோ 78 ரன்களும் எடுத்தனர். ஆனால் மற்றவர்கள் சோபிக்கவில்லை. இறுதியில் 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இலங்கை.
இந்தியாவின் மோஹித் ஜாங்ரா 5 விக்கெட்களையும், ஆயுஷ் பதோனி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதோனி இந்த டெஸ்டில் 6 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 185 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார்.
இந்த போட்டியின் மூலம் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால் பேட்டிங்கில் டக் அவுட்டானார்.