மும்பை : இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 88 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் ஒளிபரப்பு உரிமையை ஏலம் விட பிசிசியை முடிவெடுத்துள்ளது.
அதன்படி ஐபிஎல் ஏலம் விட்டது போல் டிஜிட்டல் மற்றும் டிவிக்கு என தனியாக ஏலம் நடத்தப்படுகிறது. ஐபிஎல் மூலம் 48,390 கோடி ரூபாய் பிசிசிஐக்கு கிடைத்தது. இதேபோன்று இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ விற்று மேலும் ஒரு 8000 கோடி பெறுவதற்கு திட்டம் தீட்டி இருக்கிறது.

கடந்த முறை இந்தியாவில் நடந்த ஐந்து ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டிகளை சுமார் 6138 கோடி ரூபாய்க்கு ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு விற்றது. இதன் மூலம் ஒரு சர்வதேச போட்டியை ஒளிபரப்பு செய்ய 60 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் என இரண்டுக்கும் இந்த தொகை கொடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய அணி மொத்தம் 88 கிரிக்கெட் போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாட போகிறதாம். இதில் 25 டெஸ்ட் போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகளில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாட உள்ளன. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஐந்து டெஸ்ட் ஆறு ஒருநாள் மற்றும் பத்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இதைப் போன்று இங்கிலாந்துக்கு எதிராக பத்து டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அனைவரும் எதிர்பார்த்த பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ இல்லை என்று பதில் அளித்து விட்டது.
இதுவரை பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாட அரசு அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இருதரப்பு தொடர் அட்டவணையில் இடம்பெறவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் மூலம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறாதது குறிப்பிடத்தக்கது.