மும்பை: இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான பயிற்சி போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை ஜூன் இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் இந்திய அணி 9 மைதானங்களில் 9 லீக் போட்டிகளில் விளையாடவுள்ளது. குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் அக்.14ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு அணிகளும் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடருக்கு முன் சில பயிற்சி போட்டிகளில் அனைத்து அணிகள் பங்கேற்க உள்ளன. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 10 பயிற்சி போட்டிகள் நடக்கவுள்ளன. ஒவ்வொரு அணிகளும் 2 பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளன. அதேபோல் பயிற்சிப் போட்டிகளுக்கான மைதானங்களாக கவுகாத்தி, ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதில் செப்.29ஆம் தேதி வங்கதேசம் - இலங்கை அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றன. அதேநாளில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளும், தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளும் மோதவுள்ளன. செப்.30ல் இந்தியா - இங்கிலாந்து அணிகளும், ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் விளையாடவுள்ளன. தொடர்ந்து அக்.2ஆம் தேதி இங்கிலாந்து - வங்கதேசம் அண்களும், நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன.
அதேபோல் அக்.3ல் ஆஃப்கானிஸ்தான் - இலங்கை அணிகளும், இந்தியா - நெதர்லாந்து அணிகளும், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளும் மோதவுள்ளன. இதனைத் தொடர்ந்து அக.4ஆம் தேதி ஒருநாள் மட்டும் ஓய்வு வழங்கப்பட்டு, அக்.5ஆம் தேதி உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது. உலகக்கோப்பைத் தொடரில் ஐதராபாத் மைதானத்திற்கு 3 போட்டிகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், 2 பயிற்சி ஆட்டங்களும் தற்போது நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.