
முடங்கிய இந்திய வீரர்கள்
கொரோனா காரணமாக 5 மாதங்களுக்கு மேல் இந்திய வீரர்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஐபிஎல் மூலம் அவர்கள் தங்களது கிரிக்கெட்டை மீண்டும் துவக்கினர். தற்போது ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடவுள்ளது. இது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்
இதனிடையே அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணியினர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 4ல் துவக்கம்
இதுகுறித்து இங்கிலாந்து வாரியத்தின் சிஇஓ டாம் ஹாரிசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் முதல் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜில் 4ம் தேதி துவங்கி 8ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.

செப்டம்பர் 14ல் முடிவு
3வது போட்டி 25 முதல் 29 வரை ஹெட்டிங்லேவிலும் 4வது போட்டி செப்டம்பர் 2 முதல் 6ம் தேதி வரை ஓவலிலும் 5வது போட்டி செப்டம்பர் 10 முதல் 14ம் தேதிவரை ஓல்ட் ட்ரபோர்டிலும் நடைபெறவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இந்தியாவுடனான தொடருக்கு முன்னதாக குறைந்தபட்ச கிரிக்கெட் தொடர்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுடன் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. மேலும் இந்திய தொடரில் பாதுகாப்புடன் ரசிகர்களை அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சிஇஓ டாம் ஹாரிசன் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











