கொழும்பு: 23 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து இந்திய அணி பழிதீர்த்த சம்பவம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து இந்திய அணி அசாத்தியத்தை நிகழ்த்தியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியை ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முடித்துக் கட்டினார் முகமது சிராஜ். இறுதியாக இலங்கை அணி 15.2 ஓவர்களில் வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன் மூலம் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் இந்தியா 23 ஆண்டுகளுக்கு பின் பழிதீர்த்துள்ளது. 2000ஆம் ஆண்டு நடைபெற்ற கோகோ கோலா சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இலங்கை அணி ஜெயசூர்யா தலைமையில் களமிறங்கியது. அதேபோல் இந்திய அணிக்கு சவுரவ் கங்குலி தலைமை வகித்தார்.
அந்தப் போட்டியில் கேப்டன் ஜெயசூர்யா முன் நின்று இந்திய அணி பவுலர்களை வெளுத்து கட்டினார். 161 பந்துகளில் 21 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உட்பட 189 ரன்களை விளாசினார். இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் சேர்த்தது. 300 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணியின் கங்குலி - சச்சின் இணை களமிறங்கியது.
ஆனால் கங்குலி 3 ரன்களிலும், சச்சின் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த யுவராஜ் சிங் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வினோத் காம்ப்ளி 3 ரன்களிலும், ஹேமங் பதானி 9 ரன்களிலும், விஜய் தாஹியா 4 ரன்களிலும், ராபின் சிங் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த பவுலர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் ராபின் சிங் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தார்.
இதன் காரணமாக இந்திய அணி 26.3 ஓவர்களுக்கு 54 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இலங்கை அணி 245 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அன்று அடைந்த அவமானகரமான தோல்விக்கு, இந்திய அணி 23 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து பழிதீர்த்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.