இந்திய அணி நியூசிலாந்துடன் தற்போது 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் வரும் 17ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக வரும் 8ஆம் தேதி இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படுகிறது.
இதனிடையே, இந்த தொடர் தற்போது நடைபெறுமா என்ற சிக்கல் எழுந்துள்ளது. அதற்கு காரணம் என்ன என்பதை தற்போது காணலாம்.

தென்னாப்பிரிக்காவில் தற்போது B.1.1529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் உருமாறியுள்ளது. இது டெல்டா வைரஸை விட வேகமாக பரவ கூடியது, மேலும் ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உலக சுகாதார மையமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதனால் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் உருவாகியுள்ள புதிய வைரஸ் காரணமாக பிரிட்டன், ஜெர்மனி,இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே நாடகளுக்கு விமான போக்குவரத்தை தடை செய்துள்ளது. இதுவரை இந்தியா தடைசெய்யவில்லை என்றாலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா, வேகமாக பரவினால், இந்தியா, தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இல்லையேனில் கடும் பயோ பபுள் விதிகளை பின்பற்றி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படலாம் என்ற கூறப்படுகிறது.ஏற்கனவே இந்தியா ஏ அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களுடைய பாதுகாப்பு குறித்தும் தற்போது கவலை எழுந்துள்ளது.