இந்திய அணி தேர்வு
இந்திய அணியில் தற்போது இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதால், சீனியர்களுக்கான இடங்கள் பறிபோகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதில் குறிப்பாக ரகானே, சட்டீஸ்வர் புஜாரா, இஷாந்த் சர்மா உள்ளிட்ட வீரர்களின் டெஸ்ட் எதிர்காலம் ஏற்கனவே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் அதற்கு முடிவுகட்ட ராகுல் டிராவிட் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
புது விதிமுறை
அதாவது இனி காயத்தினாலோ, ஃபார்ம் அவுட்டாகியோ இந்திய அணியை விட்டு வெளியேறும் வீரர்கள், "விஜய் ஹசாரே, ராஞ்சி கோப்பை" போன்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்துவிட்ட பின்னர் தான் இந்திய அணி தேர்வுக்கு வர முடியும் என டிராவிட் முடிவெடுத்துள்ளார்.
கும்ப்ளேவின் திட்டம்
இதற்கு முன்னர் இந்த திட்டத்தை, அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக இருந்த போது அறிமுகப்படுத்தினார். பின்னர் ரவி சாஸ்திரியின் பதவி காலத்தின் போது கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதே திட்டத்தை ராகுல் டிராவிட் கையில் எடுத்துள்ளார்.
முக்கிய காரணம் யார்?
இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாக இருப்பவர் ஹர்திக் பாண்ட்யா. காயத்தால் அணியில் இருந்து வெளியேறிய பாண்ட்யா, மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். தற்போது மீண்டும் அவரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என அழுத்தங்கள் வருவதாக தெரிகிறது. இதற்காக தான் அனைவருக்கும் பொதுவானதாக புதிய திட்டத்தை டிராவிட் கொண்டு வந்துள்ளார்.