பிசிசிஐக்குத் தெரியாமல் மொரீஷியஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற டெல்லி வீரர்!
டெல்லி: டெல்லியை சேர்ந்த அனுஜ் ராவத், சமீபத்தில் இலங்கையில் நான்கு நாள் போட்டிகளில் ஆடிய இந்திய பத்தொன்பது வயதுக்கு உட்பட்டவர்கள் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். மொரிஷியஸ் நாட்டில் கடந்த ஆண்டு நடந்த ஒரு டி20 லீக் தொடரில் இவர் விளையாடி உள்ளார்.
ஆனால், அப்போது பிசிசிஐ-யிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த விஷயம் ஒரு யூட்யூப் கிரிக்கெட் வீடியோவால் தற்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், அனுஜ் ராவத் மற்றும் சில இந்திய முதல் தர கிரிக்கெட் வீரர்கள், மொரிஷியஸ் நாட்டில் நடைபெற்ற டி20 லீகில் பங்கேற்று உள்ளனர். மொரிஷியஸ் நாட்டிற்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற சலுகை உள்ளது. இதனால், பிசிசிஐ-யின் தடை இல்லா சான்றிதழ் இல்லாமலேயே, மொரிஷியஸ் நாட்டில் கிரிக்கெட் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இதே கிரிக்கெட் தொடரில் ஆட மற்றொரு பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட இந்திய அணி வீரர் மனோஜ் கல்ரா, பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்ததாகவும், அதை பிசிசிஐ நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அனுஜ் ராவத் தவிர்த்து, மேலும் சில இந்திய வீரர்கள் இந்த அனுமதி இல்லாத தொடரில் ஆடி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ விசாரித்து வருவதாக தெரிகிறது.
இது பற்றி பேசிய பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி, “ஜூனியர் வீரர்கள் எங்களை மீறி, ஒப்புதல் இல்லாத தொடரில் விளையாடி இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது மிகவும் கவனமாக பார்க்கப்பட வேண்டும்” என்றார்.
இது குறித்து பிசிசிஐ-இன் சபா கரீம் கூறுகையில், “இந்தியாவுக்கு வெளியே எந்த தொடரில் ஆடுவதாக இருந்தாலும், வீரர்கள் பிசிசிஐ-யிடம் இருந்து தடை இல்லா சான்று பெற வேண்டும். அனுஜ், அதை பெற்றாரா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. நீங்கள் இதை டெல்லி கிரிக்கெட் அமைப்பிடமும் கேட்க வேண்டும்” என கூறியுள்ளார்.
டெல்லி கிரிக்கெட் அமைப்பு, அனுஜ் தங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என கூறியதாக செய்திகள் வந்துள்ளன. இதனால், அனுஜ் மற்றும் அவரோடு மொரிஷியஸ் நாட்டிற்கு சென்ற வீரர்களிடம் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
Story first published: Friday, August 3, 2018, 15:18 [IST]
Other articles published on Aug 3, 2018


Click it and Unblock the Notifications