புல்வாயோ: 2026 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஜிம்பாப்வேயை 204 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. புல்வாயோ நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி பெற்ற இந்த மகத்தான வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியினர் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி 352/8 ரன்களைக் குவித்தனர். விகான் மல்ஹோத்ரா 107 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் குவித்து அசத்தினார். வைபவ் சூர்யவன்ஷி தனது 30 பந்துகளில் 52 ரன்களும், அபிஞான குண்டு 62 பந்துகளில் 61 ரன்களும் அடித்து தங்களின் இரண்டாவது அரைசதத்தைப் பதிவு செய்தனர்.

சூர்யவன்ஷி துவக்கத்திலேயே 24 பந்துகளில் மின்னல் வேக அரைசதம் விளாசி அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். பின்னர் அபிஞான குண்டு மற்றும் விகான் மல்ஹோத்ரா ஆகியோர் 113 ரன்கள் சேர்த்து முக்கிய பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஜிம்பாப்வே தரப்பில் டட்டெண்டா சிமுகோரோ சில முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய பேட்டிங் வேகத்தைத் தற்காலிகமாகச் சற்றே மட்டுப்படுத்தினார்.
353 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். தொடக்க ஆட்டக்காரர்களான நதானியேல் ஹல்பங்கனா மற்றும் துருவ் படேல் முதல் நான்கு ஓவர்களுக்குள்ளேயே பெவிலியன் திரும்பினர். இதனால் ஜிம்பாப்வே அணி 26/3 என தடுமாறியது.
கடினமான தொடக்கத்திற்குப் பிறகு, ஜிம்பாப்வேயின் நடுவரிசை வீரர்கள் சற்று போராட்டத்தை வெளிப்படுத்தினர். கியான் பிக்னோட் மற்றும் லீராய் சியூலா இருவரும் இணைந்து 109 பந்துகளில் 69 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்திய பந்துவீச்சாளர்களுக்குச் சவாலளித்தனர். சியூலா 62 ரன்களும், டட்டெண்டா சிமுகோரோ 29 ரன்களும் எடுத்தனர். ஒருகட்டத்தில் அவர்கள் அதிரடியாகவும் ஆடினர்.
இந்திய பந்துவீச்சாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினர். கேப்டன் ஆயுஷ் மஹீந்திரா (3/14) தனது அபார பந்துவீச்சின் மூலம் மைக்கேல் பிக்னோட், சிம்பரஷே முட்ஜெங்கெரெரே, டட்டெண்டா சிமுகோரோ ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.உத்தவ் மோகன் (3/20) லீராய் சியூலா, டக்குட்ஜ்வா மகோனி, வெப்ஸ்டர் மதிதி ஆகியோரை அவுட்டாக்கி ஜிம்பாப்வேயின் டெய்லெண்டர்களை விரைவாகச் சரித்தார்.
ஆர்.எஸ். அம்ப்ரிஷ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பங்களிப்பைச் செய்தார். இதனால் ஜிம்பாப்வேயின் போராட்டம் முடிவுக்கு வந்தது.ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 38 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து, 204 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 109 ரன்கள் அடித்த இந்திய வீரர் விகான் மல்ஹோத்ரா "ஆட்ட நாயகன்" விருதை வென்றார்.