பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர் 19 அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய இளம் படை தங்களது ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறது.
சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அண்டர் 19 அணியில் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்கோத்ரா உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஏற்கனவே இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா வென்ற நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன் அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். எனினும் 14 வயது சூர்யவன்சி இரண்டு சிக்சர்கள் அடித்த நிலையில் 16 ரன்களில் வெளியேறினார். மல்கோத்ரா 52 பந்துகளை எதிர் கொண்டு ஆறு பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்தார்.
இதேபோன்று நடுவரிசையில் வேதாந்த் திரிவேதி அட்டகாசமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணி சரிவில் இருந்தபோது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 பந்துகளை எதிர்கொண்டு 86 ரன்கள் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டரிகள் அடங்கும். இதே போன்று ராகுல் குமார் 84 பந்துகள் எதிர் கொண்டு 62 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும்.
ஹர்வான்ஸ் பாங்காளா 23 ரன்களும் கிலான் பட்டேல் 20 ரன்களும் எடுக்க இந்திய அண்டர் 19 அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர் அலேக்ஸ் லீ யங் 4 ரன்களிலும், ஸ்டீபன் ஹோகன் ஒன்பது ரன்களிலும் கேப்டன் வில் மலாஜ் 15 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் டர்னர் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 59 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று டாம் ஹோகன் 50 பந்துகளில் எதிர்கொண்டு 28 ரன்கள் சேர்த்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனை அடுத்து களம் இறங்கிய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் வெறும் மூன்று பேர் மட்டும் தான் இரட்டை இலக்கம் ரன்களை பெற எஞ்சிய ஏழு பேரும் ஒற்றை இலக்கம் ரன்களில் பெவலின் திரும்பினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணி 28.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய சுழற் பந்துவீச்சாளர் கிலான் பட்டேல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் உதவ் மோகன் மூன்று விக்கெட்டுகளும், கனிஷ்க் சவுஹான் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அண்டர் அணி ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.