மும்பை: ஐசிசி U19 உலகக் கோப்பையை ஆறாவது முறையாக வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிசிசிஐ அணிக்கு 7.5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.
ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 411 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 311 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் குவித்தார்.

கேப்டன் ஆயுஷ் மகாத்ரே 53 ரன்களும், விக்கெட் கீப்பர் அபிஞான் குண்டு 40 ரன்களும் எடுத்து அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர். வைபவ் சூர்யவன்ஷி, அதிரடியாக விளையாடி வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து அனைவரையும் அசத்தினார். இந்த மிரளவைக்கும் இன்னிங்ஸில் 15 பவுண்டரிகளும், 15 சிக்ஸர்களும் அடங்கும். அவரது தனிப்பட்ட செயல்பாடு போட்டியின் போக்கை இந்தியாவுக்குச் சாதகமாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தது, இங்கிலாந்து அணியை தடுமாற வைத்தது.
இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு, பிசிசிஐ அணிக்கு 7.5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது. பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் ஆடவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 7.5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்," என்று I தெரிவித்தார்.
இந்த மொத்தப் பரிசுத் தொகையானது, அணியின் வீரர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் தேசிய இளையோர் தேர்வுக் குழுவினருக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். யாருக்கு எவ்வளவு பணம் என்பது விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் சைகியா கூறினார். இந்திய கிரிக்கெட்டின் இளம் வயது பிரிவினர் திறனை அதிகரிக்க, பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பமுவதாகவும், அதற்கான முடிவுகள் தான் தற்போது தெரிவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
தற்போது, இந்திய கிரிக்கெட் அணி 19 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு உலகக் கோப்பை பட்டங்களையும் தன்வசம் வைத்துள்ளது. இது கிரிக்கெட் உலகில் ஒரு அபூர்வ இரட்டைச் சாதனையாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தியாவின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இறுதிப் போட்டியின் சிறந்த வீரர் மற்றும் தொடரின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு மதிப்புமிக்க விருதுகளையும் வென்று சாதனை நிகழ்த்தினார்.
இளையோர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணித் தலைவராக, ஆயுஷ் மகாத்ரே, முகமது கைஃப், விராட் கோலி, உன்முக்த் சந்த், பிருத்வி ஷா மற்றும் யஷ் துல் போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளார். இதேவேளையில், மூத்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கான ஒப்பந்தங்கள் குறித்து பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் சைகியா தெரிவித்தார்.