சிட்னி: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அண்டர் 19 அணி மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் முழுமையாக ஒயிட்வாஷ் செய்து வீழ்த்தியதோடு, 30 ஆண்டு கால உலக சாதனை ஒன்றையும் இந்திய இளம் வீரர்கள் அணி செய்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் கிடைத்த இந்த வெற்றி, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை எவ்வளவு பலமாக உருவாகி வருகிறது என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அண்டர் 19 அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்தச் சுற்றுப்பயணத்தில் ஒரு போட்டியில் கூடத் தோற்காமல், ஆஸ்திரேலியாவை முழுமையாகத் தரைமட்டமாக்கியது. 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இந்திய அண்டர் 19 அணியில் இடம் பெற்று ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடர் (3-0): இந்திய அணி மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று, தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.
டெஸ்ட் தொடர் (2-0): முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரையும் 2-0 எனக் கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் உச்சமாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அண்டர் 19 அணி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. வெற்றி தோல்வியுடன் முடிந்த மிகக் குறுகிய யூத் டெஸ்ட் போட்டி என்ற 30 ஆண்டு கால உலக சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.
புதிய சாதனை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது யூத் டெஸ்ட் போட்டி, வெறும் 886 பந்துகளிலேயே முடிவுக்கு வந்தது. இதுவே, வெற்றி தோல்வியுடன் முடிந்த மிகக் குறுகிய யூத் டெஸ்ட் போட்டியாகும்.
முறியடிக்கப்பட்ட சாதனை: இதற்கு முன்பு, 1995-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி வென்ற போட்டி, 992 பந்துகளில் முடிவடைந்ததுதான் சாதனையாக இருந்தது. அதை தற்போது இந்தியா முறியடித்து உள்ளது.
மெக்கேவில் நடைபெற்ற இரண்டாவது யூத் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் படுமோசமாகச் சரிந்தது. முதல் இன்னிங்ஸில் 135 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 116 ரன்களுக்கும் ஆஸ்திரேலியா சுருண்டது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் எடுத்து, 36 ரன்கள் என்ற முன்னிலையைப் பெற்றது. இதையடுத்து, 81 ரன்கள் என்ற எளிய இலக்கை, இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதாக எட்டி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில், ஹெனில் படேல் மற்றும் தீபேஷ் தேவேந்திரன் ஆகியோர் பேட்டிங்கில் முக்கியப் பங்களிப்பை அளித்தனர்.