மும்பை: ICC ஆண்கள் உலகக் கோப்பையை ஆறாவது முறையாக ஆயுஷ் மகாத்ரே தலைமையிலான இந்திய அணி, க் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில், வைபவ் சூர்யவன்ஷியின் 175 ரன்கள் உதவியுடன் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெற்றி குறித்து பாராட்டியுள்ள பிரதமர் மோடி, அண்டர் 19 உலககோப்பையை மீண்டும் தாயகத்திற்கு கொண்டு வந்துவிட்டனர். இந்த தொடர் முழுவதும் நமது வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றி எதிர்காலத்தில் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இந்த வெற்றிக்கு நட்சத்திர வீரர் விராட் கோலி தனது எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்தார். அவர், “19 வயதுக்குட்பட்ட இந்திய அணி மீண்டும் உலகக் கோப்பையை வென்றதற்கு வாழ்த்துக்கள். இந்த வயதுப் பிரிவிலும் அதற்கு அப்பாலும் ஆதிக்கம் தொடர்கிறது. முழு அணிக்கும், பயிற்சியாளர் துணைப் பணியாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்,” என்று பதிவிட்டிருந்தார். மகாத்ரே, கோலியைப் போலவே, உலகக் கோப்பையை வென்ற ஆறாவது இந்திய கேப்டன் ஆனார்.
இந்த வெற்றிக்கு காரணமான வைபவை பாராட்டிய சேவாக், "வைபவ் சூரியவம்ஷி, சூர்ய வம்சத்தில் இருந்து பிறந்தவர். சூரியனை யாராவது தடுக்க முடியுமா? இந்திய கிரிக்கெட்டின் புதிய சூரியன் உதித்துவிட்டது" என்று பாராட்டினார். இளம் படையினரை பாராட்டிய கேப்டன் சூர்யகுமார், 6வது முறையாக கோப்பையை வென்று நாட்டின் அனைத்து மக்களையும் பெருமைப்படுத்திவிட்டீர்கள் என்று தெரிவித்தார்.
வெற்றிக்குப் பின் கேப்டன் மகாத்ரே, “ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்மன்ப்ரீத் இருவரும் உலகக் கோப்பையை வென்றது போல் நாங்களும் வெல்ல விரும்பினோம், இப்போது வென்றுள்ளோம்,” என்று இந்திய கிரிக்கெட் பாரம்பரியத்தை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.வைபவ் சூர்யவன்ஷி, இறுதிப் போட்டி மற்றும் தொடரின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் வென்ற முதல் வீரர் ஆனார். வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்த அவர், 15 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
71 பந்துகளில் 150 ரன்களை எட்டி, 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் அதிவேக 150 ரன்கள் அடித்த சாதனையையும் நிகழ்த்தினார். 412 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து, 41 ஓவர்களில் 311 ரன்களுக்குச் சுருண்டது. இது இந்தியா 2000, 2008, 2012, 2018, 2022ல் வென்ற கோப்பைகளுடன் சேர்த்து, தனது ஆறாவது உலகக் கோப்பையை வென்று அண்டர் 19 தொடரில் அதன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.