பெங்களூரு: வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர்-10 ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் டி20 உலக கோப்பை தொடர் நடந்து வருகிறது. இன்று பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்காளதேச அணியில் தமிம் இக்பால் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 16 பந்துகளை சந்தித்து 18 ரன்கள் எடுத்தார். மற்றொரு புறம் தவான் 22 பந்துகளை சந்தித்து 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
விராட் கோஹ்லி (24), ரெய்னா (30), ரன்கள் எடுத்தனர். பாண்ட்யா (15), யுவராஜ் (3), ரன்கள் எடுத்து வெளியேறினர். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. டோணி (13), அஷ்வின் (5) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணியைத் தொடர்ந்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கியது வங்கதேசம். அந்த அணிக்கு தமீம் இக்பால், மிதுன் அலி துவக்கம் தந்தனர். மிதுன் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். தமீம் இக்பால் 2 முறை கேட்ச் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் இந்திய வீரர் தவறவிட்டதால். அவர் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார்.

பின்னர் சபீர் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். சாகிப் 15 பந்துகளில் 22 ரன்களும், கேப்டன் மஷ்ரபே மொர்டாசா 6 ரன்களில் நடையை கட்டினார். சவுமியா சர்கார் (21), கடைசி ஓவரில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைபட்டது. கடைசி ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அந்த ஓவரின் 2-வது மற்றும் 3-வது பந்துகளில் ரஹீம் பவுண்டரி அடித்தார். இதனால் ஆட்டத்தின் போக்கு மாறியது.
இருப்பினும் மனம் தளராத அனுபவ வீரர்கள் நெஹ்ரா, டோணி ஆகியோர் பாண்ட்யாவுக்கு ஆலோசனை வழங்க, அடுத்தடுத்து ரஹீம் (11), மகமதுல்லா (18) விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்ட்யா. கடைசியில் ஒரு பந்தில் 2 ரன்கள் தேவைபட்ட நிலையில் டோணி முஸ்தாபிஷரை அபாரமாக ரன் அவுட் செய்ய, வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். தமிழக வீரர் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மோடி வாழ்த்து:
வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். போட்டி த்ரில் நிறைந்ததாக இருந்தது என்று மோடி டுவிட்டரில் கூறியுள்ளார்.