அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டாலும், அணியின் ஃபீல்டிங் மற்றும் கேட்ச் பிடிக்கும் திறன் படுமோசமாக இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். முக்கியப் போட்டிகளில் இந்தத் தவறு தொடர்ந்தால் இந்தியா தொடரை விட்டு வெளியேற நேரிடும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய வருண் ஆரோன், இந்திய அணியின் ஃபீல்டிங் குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "இந்திய அணிக்கு இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை. கடந்த 12 முதல் 18 மாதங்களாகவே கேட்ச் பிடிப்பதில் மிக மோசமான அணியாக இந்தியா உள்ளது. அவர்களின் கேட்ச் பிடிக்கும் சதவீதம் 70க்கும் குறைவாகவே உள்ளது."
"ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது 2 அல்லது 3 கேட்ச்களைத் தவறவிடுகிறார்கள். லீக் சுற்றில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், சூப்பர் 8 மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் முக்கியமான கேட்ச்களைத் தவறவிட்டால் அது தோல்வியில் முடியும்" என்று எச்சரித்துள்ளார்.
நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கில் சொதப்பினர். அந்த அணியின் வீரர் லயன் கேஷட் கொடுத்த கேட்சை, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு தவறவிட்டனர். அதேபோல கடைசி ஓவரில் திலக் வர்மாவும் ஒரு எளிய கேட்சை நழுவவிட்டார். நெதர்லாந்து போன்ற சிறிய அணி என்பதால் இந்தியா தப்பித்தது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் மொத்தம் 9 கேட்ச்களை இந்திய வீரர்கள் தவறவிட்டுள்ளனர். இந்தத் தொடரில் அதிக கேட்ச்களைத் தவறவிட்ட அணிகள் பட்டியலில் அயர்லாந்துக்கு (10 கேட்ச்) அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இது ஒரு பலம் வாய்ந்த அணிக்கு அழகல்ல என்று விமர்சிக்கப்படுகிறது.
சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது. 2024 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதிய அதே அணி என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். கிளாசென், மில்லர் போன்ற அதிரடி வீரர்களின் கேட்சை தவறவிட்டால் அது ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிடும். எனவே, ஃபீல்டிங்கில் உள்ள குறைகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற அணியுடன் ஒப்பிட்டால் தற்போதைய இந்திய அணியில் சில குறைகள் இருப்பதாக பரவலாக விமர்சனம் உள்ளது. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா போட்டியில் இந்தியா வென்றே ஆக வேண்டும். இல்லையெனில் கடும் விமர்சனத்தை எதிர்கொள்ள நேரிடும்.