டெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. தொடர் நாயகன் விருதை அஸ்வினும், ஆட்ட நாயகன் விருதை அஜிங்ய ரஹானேவும் தட்டிச் சென்றனர்.
மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் மழையால் டிரா ஆனது. நாக்பூரில் நடந்த 3வது டெஸ்டில் இந்தியா வென்றது. எனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. டாசில் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களும், தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 121 ரன்களும் எடுத்த நிலையில், 213 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2வது இன்னிங்சை விளையாடியது.
நேற்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இந்திய அணி விளையாடியது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோஹ்லி 88 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ரஹானே சதம் அடித்ததும், இந்திய அணி 267 ரன்னில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. ரஹானே 100 ரன்களிலும், விருதிமான் சாஹா 23 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் இன்னிங்சிலும் சதம் அடித்த ரஹானே இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 481 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா இன்றைய ஆட்ட நேர முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.

டி வில்லியர்ஸ் 91 பந்துகளில் வெறும் 11 ரன்களும், கேப்டன் ஆம்லா, 207 பந்துகளில் 23 ரன்களும் எடுத்து போட்டியை எப்படியாவது டிரா செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடிவந்தனர்.
எனவே, கடைசி நாளான இன்று, இந்திய அணி எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் வெற்றி பெறலாம். இல்லையேல் ஆட்டம் டிரா ஆகும் என்ற நிலை உருவானது. இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
244 பந்துகளை சந்தித்த ஆம்லா 25 ரன்களில் ஜடேஜா பந்தில் பௌல்ட் ஆனார். டுப்ளசிஸ் 97 பந்துகளை எதிர்கொண்டு, ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் 10 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து டுமினியை அஸ்வின் டக்-அவுட் செய்தார்.
மறுமுனையில் ஓரளவு தாக்குப்பிடித்த டிவில்லியர்ஸ் 297 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து, தேனீர் இடைவேளை நேரத்துக்கெல்லாம், 143 ரன்களில் தென் ஆப்பிரிக்கா சுருண்டது. உணவு இடைவேளையின்போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்கா அடுத்த சில மணி நேரங்களில் முற்றிலுமாக காலியானது.
தொடர் முழுக்க சிறப்பாக பந்து வீசி 4 டெஸ்டுகளில் மொத்தம் 31 விக்கெட்டுகளை வீழ்த்திய, அஸ்வின் தொடர் நாயகன் விருதையும், கடைசி டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய ரஹானே ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்றனர்.
டோணி தலைமையிலான இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை தென் ஆப்பிரிக்காவிடம் இழந்தது. கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி, அனைத்து போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பழி தீர்த்துக்கொண்டது.