மொஹாலி : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். டாஸ் நிகழ்வின் போது ரோஹித் சர்மா ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டதாக அறிவித்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் பிசிசிஐ அதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறது.
இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா திரும்பிய நிலையில் அவருடன் துவக்க வீரராக இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என கூறப்பட்டது. வலது - இடது கை பேட்ஸ்மேன்கள் துவக்கம் அளித்து ஆடினால் அது சாதகமாக அமையும் என்பதால் அந்த முடிவில் இந்திய அணி உறுதியாக இருந்தது. போட்டிக்கு முந்தைய தினம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் தான் அணிக்கு துவக்கம் அளிப்பார்கள் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் ஜெய்ஸ்வாலலுக்கு போட்டி நாள் அன்று வலது பக்க இடுப்பில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் முதல் டி20யில் இருந்து நீக்கப்பட்டு சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்கினார். இது குறித்து வேண்டுமென்றே இந்திய அணியின் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டதாக தகவல்கள் மற்றும் விமர்சனம் எழ வாய்ப்பு இருந்த நிலையில், பிசிசிஐ டாஸ் முடிந்த உடன் ஜெய்ஸ்வால் குறித்த விளக்கத்தை அளித்தது.
முதல் டி20யில் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான் ஆகியோர் ஆடவில்லை. விராட் கோலி ஓய்வில் இருக்கிறார். மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டி20யில் களமிறங்கிய இந்திய அணி :
ரோஹித் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சிவம் துபே, ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.