இந்தூர் : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் செய்த தவறால் மூன்று பவுண்டரிகள் அடுத்தடுத்து சென்றன. அதைப் பார்த்த ரோஹித் சர்மா தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டாவதாக பந்து வீசும் போது காற்றில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக சரியாக பந்துவீச முடியாது என்பதால் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார்.

முதல் 6 ஓவர்கள் பவர்பிளே என்றாலும், சுழற் பந்துவீச்சாளர்களை பவர்பிளேவில் பயன்படுத்துவது என்பதில் உறுதியாக இருந்தார் ரோஹித் சர்மா. அந்த வகையில் 3வது ஓவரை சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே அவர் ஆப்கானிஸ்தான் துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அதனால், கேப்டன் ரோஹித் சர்மா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆனால், ஐந்தாவது ஓவரில் ரவி பிஷ்னோய் அதற்கு வேட்டு வைத்தார். அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளை அவர் தவறான லைன் மற்றும் லென்த்தில் பிட்ச் செய்து வீசினார். முதல் பந்தில் சிக்ஸ் அடித்த குலாப்தீன், அடுத்த இரண்டு பந்துகளில் ஃபோர் அடித்தார். அதனால், ரவி பிஷ்னோய்-ஐ பவர்பிளே பவுலராக பயன்படுத்தலாம் என்ற ரோஹித் சர்மாவின் திட்டம் தோல்வி அடைந்தது.
பின்னர் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். எனினும், அவரை விட அதிகமாக சிவம் துபே 3 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். முகேஷ் குமார் 2 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. மற்ற பந்துவீச்சாளர்களின் சொதப்பலால் ரவி பிஷ்னோய் அதிக ரன் கொடுத்தது பெரிய விமர்சனத்தை கிளப்பவில்லை.
பின்னர் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது. பின்னர் இந்திய அணியின் சேஸிங்கில் சிவம் துபே, ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடியதை அடுத்து இந்திய அணி 15.4 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.