பெங்களூர் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் மூன்று வீரர்களை நீக்கினார் ரோஹித் சர்மா. ஆனாலும், அவர்கள் வீரர்கள் அறையில் மகிழ்ச்சியுடனே காணப்பட்டனர். அதற்கு காரணம், அவர்கள் டி20 உலகக்கோப்பை அணியில் கிட்டத்தட்ட தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான டி20 தொடர் தான் 2024 டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணியின் கடைசி சர்வதேச டி20 தொடராகும். அதனால், டி20 உலகக்கோப்பைகான இந்திய அணித்தேர்வும் நடந்து வருகிறது. இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா, சுழற் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோர் இதுவரை தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பில் தங்களை நிரூபித்து இருக்கிறார்கள். ஜிதேஷ் சர்மா ஆப்கானிஸ்தான் தொடரில் ஒரு அபாரமான ஃபினிஷிங் செய்தார். அர்ஷ்தீப் சிங் கடந்த ஆண்டில் சில தொடர்களில் சொதப்பலாக பந்து வீசிய போதும், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் டி20 தொடர்களில் தன் ஃபார்மை மீட்டார்.
அக்சர் பட்டேல் தன் அனுபவத்தை காட்டினார். மற்ற பந்துவீச்சாளர்கள் டி20 போட்டிகளில் ஓவருக்கு 6 ரன், 8 ரன் என வாரிக் கொடுத்த போதும் அவர் 4 ரன், 5 ரன் என சிக்கனமாக ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். இவர்கள் மூவரும் சிறப்பாக செயல்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஓய்வு அளித்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
அவர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், வேகப் பந்துவீச்சாளராக ஆவேஷ் கான், சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்வதில் இந்திய அணிக்கு சிக்கல் இருப்பதாக விமர்சனம் இருந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தப் போட்டியில் இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் ரோஹித் சர்மா, ரிங்கு சிங் ஜோடி அபார ஆட்டம் ஆடி அணியை மீட்டது.