மும்பை : விராட் கோலி டி20 கிரிக்கெட்டின் பிரம்மாண்ட மைல்கல் சாதனை ஒன்றை செய்ய இருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 6 ரன் சேர்த்தால் அவர் அந்த மாபெரும் சாதனையை எட்டுவார் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான பேட்ஸ்மேனாக அறியப்படும் விராட் கோலி அவரைப் போல டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். ஆனால், டி20 போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அதிகம் ஆடாத நிலையில், கிரிக்கெட்டின் நவீன வடிவமான டி20யில் சச்சினுக்கு அடுத்த தலைமுறை வீரரான விராட் கோலி தன் முத்திரையை பதித்து இருக்கிறார்.

அந்த வகையில் சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட பிற உள்ளூர் டி20 போட்டிகளை சேர்த்து ஒட்டு மொத்த டி20 போட்டிகளில் விராட் கோலி இதுவரை 11994 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 6 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் டி20போட்டிகளில் 12000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். மேலும், உலக அளவில் இந்த மைல்கல் சாதனையை செய்யும் நான்காவது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெறுவார்.
உலக அளவில் இதுவரை கிறிஸ் கெயில் (14562 ரன்கள்), சோயப் மாலிக் (12993 ரன்கள்), கீரான் பொல்லார்ட் (12430 ரன்கள்) அடித்து முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து விராட் கோலி 12000 டி20 ரன்கள் குவித்து நான்காம் இடத்தை பெறுவார். இந்த நால்வரில் விராட் கோலி தான் அதிக டி20 பேட்டிங் சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டியில் விராட் கோலி இந்த மைல்கல்லை எட்ட வாய்ப்பு உள்ளது. இந்த டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்று தொடரைக் கைப்பற்றி இருக்கும் நிலையில் மூன்றாவது போட்டியிலும் வென்று ஆப்கானிஸ்தான் அணியை வைட்வாஷ் செய்யும் முயற்சியில் உள்ளது. விராட் கோலி 14 மாத இடைவெளிக்கு பின் சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.