மொஹாலி : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தன் ரன் அவுட்டுக்கு காரணமான சுப்மன் கில்லை நேரலையில் கடுமையாக வசை பாடினார் கேப்டன் ரோஹித் சர்மா. என்னதான் தவறு செய்தாலும் ரோஹித் சர்மா நடந்த கொண்ட விதத்தால் சுப்மன் கில் மனமுடைந்து போனார்.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 158 ரன்கள் குவித்தது. இது இந்திய அணியால் எட்டக் கூடிய இலக்கு என்பதோடு, ரோஹித் சர்மா நீண்ட காலத்துக்கு பின் சர்வதேச டி20 போட்டியில் பேட்டிங் ஆட வந்ததால் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இரண்டாவது பந்தில் ரன் அவுட் ஆனார்.

சுப்மன் கில் ரோஹித் ரன் ஓடி வந்ததை பார்க்காமல் பந்தை பார்த்துக் கொண்டே இருந்தார். ஆனால், ரோஹித் மறுமுனைக்கு ரன் ஓடி வந்து விட்டார். இதை அடுத்து ரோஹித் சர்மா ரன்னே எடுக்காமல் ரன் அவுட் ஆனார். சுப்மன் கில் செய்த தவறால் அவுட் ஆனதை அடுத்து, அப்போதே ரோஹித் அவரை கடுமையாக வசை பாடினார். பந்தை பார்க்காமல் நின்றதாகக் கூறி திட்டினார்.
என்னதான் தவறு செய்தாலும் ஒரு மூத்த வீரர், அதுவும் அணியின் கேப்டன் பேசிய வசவு பேச்சுக்களை கேட்டு அதிர்ந்து போனார் சுப்மன் கில். அதன் பின் இறுக்கமான முகத்துடன் பேட்டிங் செய்தார். செய்த தவறை சரி செய்யும் வகையில் அதிரடி ஆட்டம் ஆடி 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இந்த நிலையில், சுப்மன் கில் தவறு செய்தார் என்றாலும் கூட ரோஹித் சர்மா அவரை திட்டியது தவறு என ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர். அதே சமயம் சுப்மன் கில்லையும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தப் போட்டியில் இந்தியா 17.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. போட்டியின் முடிவில் இந்த சம்பவம் குறித்து பேசிய ரோஹித் சர்மா, ரன் அவுட் ஆன போது தான் வெறுப்படைந்ததாகவும், ஆனால் கிரிக்கெட்டில் இது சகஜம் தான் எனக் கூறினார்.