இந்தூர் : இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தவிர்க்க முடியாத வீரராக வலம் வர முக்கிய காரணம், அவர் வேகப் பந்து வீசும் பேட்ஸ்மேன் என்பது தான். அதிலும் அதிரடி பேட்ஸ்மேன் என்ற அடையாளமும் அவருக்கு கூடுதல் பலமாக இருந்தது.
அவருக்கு இணையான வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் இந்திய அணிக்கு இதுவரை சரியாக அமையவில்லை. அதனால், ஹர்திக் பாண்டியா எத்தனை முறை காயத்தில் சிக்கினாலும் அவர் உடல்நிலை சரியானவுடன் உடன் நேராக அணிக்குள் வந்து விடுவார்.

தற்போது அவர் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் ஆவார் என கூறப்படுகிறது, இடையே மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்த விவகாரங்களால் ரோஹித் மனதளவில் காயமடைந்து இருக்கலாம் என ஒரு பேச்சு உள்ளது.
இந்த நிலையில் தான் இந்திய டி20 அணியில் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டரான சிவம் துபேவை அவர் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் முக்கிய வீரராக பயன்படுத்தி வருகிறார். முதல் இரண்டு டி20 போட்டிகளில் சிவம் துபே தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு 60 மற்றும் 63 ரன்கள் குவித்தார். இரண்டு போட்டிகளிலும் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். ஒரு வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டருக்கு இது சிறந்த அடையாளம்.
இனி ஹர்திக் பாண்டியா காயத்தில் சிக்கினால், சிவம் துபே அணியில் சேர்க்கப்படுவார். இது ஹர்திக் பாண்டியாவுக்கு ரோஹித் சர்மா கொடுத்த முதல் பதிலடியாக பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் ஹர்திக் பாண்டியா தனக்கு காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஃபார்ம் அவுட் ஆகாமல் இருக்க வேண்டும் என்ற அழுத்தம் ஏற்படும்.
சிவம் துபே நேரடியாக பாண்டியாவை அணியை விட்டு நீக்கும் அளவுக்கு எல்லாம் செல்ல முடியாது என்றாலும் இது ஒரு வகையில் பாண்டியாவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என கருதப்படுகிறது.