பெங்களூர் : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ள மூன்றாவது டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இயல்பாகவே அதிக ரன்கள் குவிக்க முடியும். ஆனால், கடைசியாக நடந்த டி20 போட்டியில் நிலைமை மாறியது.
கடைசியாக பெங்களூரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டி20 போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், அதையும் சமாளித்து அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதை அடுத்து அந்த மைதானத்தின் பிட்ச் மாறி விட்டதாக ஒரு பேச்சு அடிபட்டது.

இந்த நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் ஓத இருக்கும் மூன்றாவது டி20 போட்டியில் அதிக ரன் அடிக்கும் வாய்ப்பு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி பெங்களூர் சின்னசாமி மைதானத்தின் பிட்ச் அதிக புற்களுடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தால் அது பேட்டிங் மற்றும் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். சுழற் பந்துவீச்சுக்கு பெரிய அளவில் கை கொடுக்காது.
எனவே, இந்த முறை இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்கள் அடிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய அணியில் சிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா போன்றோர் மிடில் ஆர்டரில் அதிரடி ஆட்டம் ஆடி வருவதால் இந்தியா எப்படியும் 200 ரன்களை அடிக்கவோ, சேஸிங் செய்யவோ வாய்ப்பு உள்ளது. நீண்ட காலத்துக்கு பின் டி20 அணிக்கு திரும்பி இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி இந்தப் போட்டிக்கு நேராக டி20 உலகக்கோப்பையில் தான் ஆட உள்ளனர். எனவே, இந்தப் போட்டியில் பெரிதாக ரன் குவிக்க வேண்டும் என நினைப்பார்கள்.
இந்த டி20 தொடரை இந்தியா 2 - 0 என கைப்பற்றிய நிலையில், கடைசிப் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக பந்துவீச்சில் சுமாராக பந்து வீசி வரும் ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு, குல்தீப் யாதவ்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.