பார்படோஸ் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டது. எனினும், மிடில் ஓவர்களில் சூர்யகுமார் யாதவை கட்டுப்படுத்த முடியாததால் இந்திய அணி 181 ரன்கள் வரை எடுத்தது.
இந்த போட்டி நடந்த கென்னிங்ஸ்டன் ஓவல் பிட்ச்சில் 160 வரை எடுத்தால் சேஸிங் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆப்கானிஸ்தான அணிக்கு, கூடுதல் ரன்கள் பதற்றத்தை அளித்தது. அதைவிட முக்கியமாக இந்திய அணியின் பந்துவீச்சின் போது இந்திய வீரர்கள் ஒரு திட்டத்தை கடைபிடித்தனர். அதாவது எந்த சூழ்நிலையிலும் தங்கள் உடல் மொழியில் பதற்றத்தையோ, பரபரப்பையோ வெளிக்காட்டக் கூடாது, மிகவும் அமைதியாக நிதானமாக இருக்க வேண்டும் என்பதை இந்திய வீரர்கள் கடைபிடித்தனர்.

ஆப்கானிஸ்தான் வீரர்கள் இயல்பாகவே இந்திய அணி பலமானது என்ற எண்ணத்துடன் உள்ளனர். அதை அப்படியே கடைப்பிடித்தாலே ஆப்கானிஸ்தான அணி அழுத்தத்தின் காரணமாக தோல்வி அடைந்து விடும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி, எந்த சூழ்நிலையிலும் தங்கள் உடல் மொழியை மாற்றவில்லை. அதே போல விக்கெட் வீழ்ச்சிகளையும் பெரிதாக கொண்டாடவில்லை.
மேலும், பும்ராவை பார்த்தும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அஞ்சினர். அவரது பந்து வீச்சில் ரன் குவிக்கவே முடியாமல் அவர்கள் திணறினார்கள். விக்கெட் போய்விடுமோ என்ற பயத்தில் பும்ரா வீசிய 24 பந்துகளில் 20 டாட் பால்களை ஆடினார்கள். அதனாலேயே அவர்களது ரன் ரேட் வெகுவாக அடி வாங்கியது. மற்ற பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் ரன் குவித்த போதும் பும்ராவின் ஓவர்களில் ரன் குவிக்காமல் போனதால், ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு தேவைப்படும் ரன் ரேட் ஒவ்வொரு ஓவரும் எகிறியது.
அதனால், ரன் ரேட் அழுத்தத்தை தாங்க முடியாத ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விகேட்களையும் இழந்தது. இதை அடுத்து இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.