பெங்களூர் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு ஈடுகொடுத்த போதும் சூப்பர் ஓவர்கள் வரை மட்டுமே அந்த அணியால் செல்ல முடிந்தது. இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு பின் போராடி தோற்றது. அந்த அணியின் தோல்விக்கு ஒரே ஒரு காரணம் தான் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரை வேகமாக வளர்ந்து வரும் அணியாக உள்ளது. குறிப்பாக டி20 போட்டிகளில் அந்த அணி பல பலமான அணிகளுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறது. ஆனால், அந்த அணியால் கடுமையான அழுத்தங்களை தாங்கி ஆட முடியவில்லை. போட்டியில் ஏதோ ஒரு இடத்தில் எதிரணியின் கை ஓங்கினால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சோர்ந்து போய் விடுகின்றனர்.

மூன்றாவது டி20 போட்டியிலும் அதே தான் நடந்தது. இந்தியா முதலில் பேட்டிங் ஆடிய நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை கடும் சிக்கலில் ஆழ்த்தி இருந்தது. அதன் பின் ரோஹித் சர்மா - ரிங்கு சிங் பேட்டிங் செய்த போது அவர்களின் அதிரடி ஆட்டத்தை பார்த்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து லைன் மற்றும் லென்த்தில் சரியாக பந்து வீசாமல் சொதப்பினர். விக்கெட் எடுக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு ரன் குவிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டனர்.
அதன் காரணமாக ரோஹித், ரிங்கு சிங் அழுத்தமின்றி பேட்டிங் செய்து ரன் குவித்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங்கில் போராட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து போட்டியை சூப்பர் ஓவருக்கு எடுத்துச் சென்றது ஆப்கானிஸ்தான். அப்போதும் பதற்றமடைந்து அந்த அணி சொதப்பியது.
போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றதும் இந்திய வீரர்கள் சிரித்து மகிழ்ந்து தாங்கள் பதற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். மூத்த வீரரான விராட் கோலி மற்ற வீரர்களை தனியே அழைத்து சூப்பர் ஓவர் குறித்து கேலி செய்து கொண்டு இருந்தார். மறுபுறம் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் குழு மட்டுமே சூப்பர் ஓவர் குறித்து தீவிரமாக விவாதம் செய்தது. அதன் மூலம், இளம் வீரர்களுக்கு அந்த பதற்றம் செல்லாமல் இந்திய அணி பார்த்துக் கொண்டது.
ஆனால், ஆப்கானிஸ்தான் கூடாரத்தில் பெரும் பதற்றம் நிலவியது. பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் விவாதம் செய்து கொண்டு இருந்தனர். யாரை பந்து வீச வைக்கலாம், யாரை பேட்டிங் செய்ய வைக்கலாம் என்பதில் அங்கே குழப்பம் இருந்தது. அதன் காரணமாக முதல் சூப்பர் ஓவரை அந்த அணியால் சமன் செய்ய மட்டுமே முடிந்தது. இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங்கில் சொதப்பி 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் அணி பதற்றம் அடையாமல் இருந்திருந்தால் இரண்டாவது சூப்பர் ஓவரில் 12 ரன்கள் என்ற இலக்கை எட்டி இருக்கலாம்.