பெங்களூர் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரிங்கு சிங் கடைசி ஓவரின் கடைசி 3 பந்தில் சிக்ஸ் அடித்து ஆப்கானிஸ்தான் அணியை கதிகலங்க வைத்தார். ரோஹித் சர்மா ஒரு பக்கம் அதிரடி ஆட்டம் ஆடி வந்த நிலையில், ரிங்கு சிங் கடைசி இரண்டு ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்து ஆப்கானிஸ்தான் கதையை முடித்தார்.
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், டாஸ் முடிவு தவறோ என எண்ணும் அளவுக்கு 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது இந்திய அணி. ஜெய்ஸ்வால் 4, கோலி 0, சாம்சன் 0, சிவம் துபே 1 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர். அதன் பின் கேப்டன் ரோஹித் சர்மா - நம்பிக்கை நாயகன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர்.
ரோஹித் துவக்கத்தில் ரன் எடுக்கத் திணறினாலும் பின் பிட்ச்சை புரிந்து கொண்டு விளாசி எடுத்தார். அவர் ஐந்தாவது சர்வதேச டி20 சதம் அடித்து தன் ஃபார்மையும் நிரூபித்தார். மறுபுறம் ரிங்கு சிங் அனுபவ பேட்ஸ்மேன் போல நிதான ஆட்டம் ஆடுவது போல இருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகமாகவே வைத்திருந்தார்.

18வது ஓவரின் முடிவில் இந்திய அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 180 - 190 ரன்கள் வரை இந்தியா சேர்க்கும் என அனைவரும் எண்ணிய நிலையில் கடைசி 2 ஓவர்களில் ரோஹித் சர்மா - ரிங்கு ஜோடி சிக்ஸர் மழை பொழிந்தது. 19 ஓவரில் ரோஹித் 1 சிக்ஸ் 2 ஃபோர், ரிங்கு 1 சிக்ஸ் அடித்து மொத்தம் 22 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து கடைசி ஓவரில் ஒரு நோ பாலையும் சேர்த்து, ரோஹித் 2 சிக்ஸ் 1 ஃபோர், ரிங்கு சிங் கடைசி 3 பந்துகளில் 3 சிக்ஸர்களும் விளாசினர். கடைசி ஓவரில் இந்தியா 36 ரன்கள் சேர்த்தது. ரிங்கு சிங் முன்பே 2 சிக்ஸ் அடித்து இருந்தார். அத்துடன் ரிங்கு சிங் மொத்தமாக 6 சிக்ஸ் அடித்து 39 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். ரோஹித் சர்மா 69 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து இருந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.