பெங்களூரு: டி20 கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த இரு போட்டிகளிலும் சேஸிங்கை தேர்வு செய்த நிலையில், பரிசோதனை முயற்சியாக பேட்டிங்கை தேர்வு செய்தார்.

14 மாதங்களுக்கு பின் ரோகித் சர்மா விளையாடிய 2 டி20 போட்டிகளிலும் டக் அவுட்டாகி வெளியேறியதால், இந்த போட்டியிலாவது ரன்கள் சேர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இதனிடையே முதல் பந்திலேயே ரோகித் சர்மா பேட்டில் பட்டு சென்ற பந்தை லெக் பைஸாக கொடுத்ததால், ஆரம்பமே மோசமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியும் 2 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ரோகித் சர்மா - ரிங்கு சிங் கூட்டணி அமைத்தது. இதன்பின் ஓவருக்கு ஒரு ஃபோர் அடிப்பதை ரோகித் சர்மா வழக்கமாக்கிய நிலையில், 8வது ஓவரில் சிக்சர் ஒன்றை விளாசி அசத்தினார். ஆனால் அப்போதும் கூட ரோகித் சர்மாவின் ஸ்கோர் 26 பந்துகளில் 24 ரன்களாக இருந்தது. ஆனாலும் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கில் ரோகித் சர்மா தவறான பந்துகளை மட்டுமே பவுண்டரியாக விளாசி வந்தார்.
12வது ஓவரை வீச அஷ்ரப் வர, அந்த ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி, அதிரடிக்கு கியரை மாற்றினார் ரோகித் சர்மா. இதன்பின் அடுத்த ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி 41 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார் ரோகித் சர்மா. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கம்பேக் ஆட்டத்தை ரோகித் சர்மா விளையாடினார்.
அதேபோல் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய இந்திய கேப்டன் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். முன்னாள் கேப்டனாக தோனி டி20 கேப்டனாக 1112 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல் இந்திய டி20 கேப்டனாக விராட் கோலி 1570 ரன்களை சேர்த்துள்ள நிலையில், ரோகித் சர்மா 1572 ரன்களை எட்டி விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அதிரடியை தொடர்ந்த ரோகித் சர்மா, மைதானத்தின் நாலாப்புறமும் சிக்சர்களை விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடிய அவர் 5 ஆண்டுகளுக்கு பின் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசி அசத்தியுள்ளார். 64 பந்துகளில் சதம் விளாசியதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இறுதிவரை களத்தில் இருந்த ரோகித் சர்மா, 69 பந்துகளில் 8 சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 121 ரன்களை விளாசி தள்ளியுள்ளார்.