பெங்களூர் : விராட் கோலியின் கோட்டையாக கருதப்படும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ரோஹித் சர்மா தன் கொடியை நாட்டி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் "ரோஹித், ரோஹித்" என்ற முழக்கம் விண்ணை முட்டியது. இது குறித்து சமூக ஊடகங்களில் கோலி - ரோஹித் ரசிகர்கள் இடையே விவாதம் நடந்து வருகிறது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானம் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியின் மைதானம். அந்த அணியின் நிரந்தர வீரராக இருக்கும் விராட் கோலிக்கு பெங்களூரில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத போதும் விராட் கோலி மீதான ஈர்ப்பால் பெங்களூரில் ஓவ்வொரு ஐபிஎல் தொடரிலும் பெரும் ரசிகர் கூட்டம் திரண்டு வரும். அதனால், பெங்களூர் கோலியின் ரசிகர் கோட்டையாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20 போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் மைதானத்துக்கு வந்தனர். தனது கோட்டையில் விராட் கோலி பெரிதாக ரன் குவிக்கப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அதைக் கண்டு ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள்.
அதன் பின் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி அணியை மீட்டார். ஒரு கட்டத்தில் சிக்ஸர் மழை பொழிந்த ரோஹித் 8 சிக்ஸ் அடுத்து சதமும் அடித்தார். அதனால் உற்சாகமான பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்கள் "ரோஹித், ரோஹித்" என முழங்கினர். அதன் பின் இந்திய அணியின் சூப்பர் ஓவரிலும் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டார். இதை அடுத்து போட்டியில் இந்தியா வென்ற பின் நீண்ட நேரம் ரசிகர் கூட்டம் அங்கேயே காத்திருந்து "ரோஹித், ரோஹித்" என முழக்கம் எழுப்பியபடி நின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் பெங்களூரில் ரோஹித் சர்மாவுக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்ததில்லை. அங்கே இந்திய அணி ஆடினால் அதிக அளவில் விராட் கோலிக்கு ஆதரவுக் குரல்கள் ஒலிக்கும். மற்ற வீரர்களுக்கு குறைந்த அளவில் தான் ஆதரவு கிடைக்கும். ஆனால், ரோஹித் சர்மாவுக்கு கிடைத்த இந்த ஆதரவு வியப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வழக்கம் போல சமூக ஊடகங்களில் கோலி - ரோஹித் ரசிகர்கள் இந்த விஷயத்தில் மோதிக் கொண்டனர். கோலி கோட்டையை ரோஹித் தகர்த்து விட்டதாக ரோஹித் ரசிகர்கள் கூறினர். அதற்கு கோலி ரசிகர்கள் மறுப்பு தெரிவித்தனர்.