பெங்களூர் : மூன்றாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா போராடி வென்ற நிலையில், அந்தப் போட்டியில் சில அம்பயர் முடிவுகள் இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. அதில் ஒரு முறை நோ பால் என தெரிந்தும் அம்பயர் நோ பால் கொடுக்காமல் இருந்ததை பார்த்து வாயடைத்துப் போனார் ரோஹித் சர்மா.
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அப்போது ரோஹித் சர்மா, ரிங்கு சிங் இணைந்து அணியைக் காப்பாற்றினர். அப்போது 14வது ஓவரின் கடைசி பந்து ரோஹித் சர்மாவின் நெஞ்சுப் பகுதிக்கு நேரே ஃபுல் டாஸாக வந்தது.

இடுப்பு உயரத்துக்கு மேல் பந்து ஃபுல் டாஸாக வந்தாலே அது நோ பால் என அறிவிக்கப்பட வேண்டும். அதனால், ரோஹித் சர்மா, அம்பயர் அந்த பந்துக்கு நோ பால் என அறிவிப்பார் என காத்திருந்தார். ஆனால், அம்பயர் நோ பால் என சொல்லவில்லை. அதனால், முதலில் வாயடைத்துப் போன ரோஹித் சர்மா, கடும் அதிருப்தி கொண்டு அடுத்த இரண்டு ஓவர்களுக்கு அம்பயரை "நல்ல வார்த்தையில்" வசை பாடினார். ஸ்டம்ப் மைக்கில் அதில் பல வசவுகள் பதிவானது. இரண்டு ஓவர்கள் ஆகியும் அவர் அதை நிறுத்தவில்லை.
அதன் பின் இரண்டு ஓவர்கள் கழித்து மீண்டும் ஒரு இடுப்பு உயர பந்து வீசப்பட்ட போது அம்பயர் உடனே நோ பால் என அறிவித்தார். நோ பால் அறிவிக்கப்படாத பந்தை விட இது மிகவும் குறைவான உயரமே சென்றது. ஆனாலும், ரோஹித்தை நினைத்து அம்பயர் நோ பால் என அறிவித்தார்.
பின்னர் இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 120 ரன்கள் குவித்தார். இந்தியா 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. பின்னர் ஆப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் குவித்ததால் போட்டி டை ஆனது. அதன் பின் ஒரு சூப்பர் ஓவர் நடந்து, அதுவும் டை ஆனது. அதை அடுத்து மீண்டும் இரண்டாவது சூப்பர் ஓவர் நடந்தது. அதில் இந்தியா வெற்றி பெற்றது.