மொஹாலி : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20யில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சிவம் துபே 40 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். அவரது ஆட்டத்தால் இந்தியா வென்ற நிலையில், அவர் போட்டிக்கு பின் பேசுகையில் தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டு தான் ஃபினிஷராக ஆடியதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது ஆடி வரும் சிவம் துபே, கேப்டனாக தோனி என்ன செய்வார் என்பது குறித்தும் கூறினார். அவர் அப்போது செய்யும் விஷயம் தனக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் அதனால் தான் சிறப்பாக ஆட முடிந்ததாக சிவம் துபே கூறினார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 158 ரன்கள் குவித்தது. அடுத்து இந்தியா சேஸிங் செய்த போது மற்ற பேட்ஸ்மேன்கள் 30 ரன்களை தாண்டாத நிலையில் சிவம் துபே நான்காம் வரிசையில் களமிறங்கி கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 40 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து அசத்தினார்.
இந்திய அணிக்கு ஒரு புது ஃபினிஷர் கிடைத்து விட்டார் என பலரும் அவரை பாராட்டிய நிலையில், போட்டிக்கு பின் அவர் பேசுகையில் தோனி குறித்தே அதிகம் பேசினார். "இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. எந்த வாய்ப்பையும் தவறவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். நான் பேட்டிங் செய்ய வந்த போது போட்டியை கடைசி வரை நின்று முடிக்க வேண்டும் என நினைத்தேன். அதை நான் மஹி பாயிடம் (தோனி) இருந்து கற்றுக் கொண்டேன். நான் எப்போதும் மஹி பாயுடன் பேசுவேன். அவர் ஒரு ஜாம்பவான். அவரை பார்த்தும், உற்று நோக்கியும் நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன்." என்றார் சிவம் துபே.
மேலும், தோனி தனக்கு எப்படி நம்பிக்கை ஊட்டினார் என்பது குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். "அவர் (தோனி) என் ஆட்டத்தை பற்றி சில விஷயங்களை எனக்கு கூறினார். அவர் எப்போதும் நான் எப்படி ஆடுகிறேன் என்பது குறித்து என்னிடம் மதிப்பிட்டு கூறுவார். நான் நன்றாக ஆடுவதாக கூறுவார். அவர் என்னை மதிப்பிட்டால் அது எனக்கு அதிக தன்னம்பிக்கை அளிக்கும். அதனால் தான் எனது தன்னம்பிக்கை அளவு இப்போது அதிகமாக இருக்கிறது" என்றார் சிவம் துபே.