மும்பை : இந்திய டி20 அணித் தேர்வில் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு நியாயமும், பவுலர்களுக்கு ஒரு நியாயமும் வழங்கப்படுவதாககக் கூறி புவனேஸ்வர் குமாரை பிசிசிஐ புறக்கணித்து இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ள வீரர்களுக்கு இந்த தொடரில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் குறிப்பாக நீண்ட காலமாக டி20 அணியில் இடம் பெறாத ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் விராட் கோலி கூட கடைசியாக ஆடிய டி20 தொடரான 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்து இருந்தார்.
ஆனால், ரோஹித் சர்மா 2022 டி20 உலகக்கோப்பை, அதன் பின் 2023 ஐபிஎல் தொடர் என கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தான் ஆடிய எந்த டி20 தொடரிலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. ஆனால், அவரை அணியில் சேர்த்ததுடன் பிசிசிஐ கேப்டன் பதவியையும் கொடுத்துள்ளதாகவும், ஆனால் தன் ஃபார்மை உள்ளூர் போட்டிகளில் நிரூபித்து இருக்கும் புவனேஸ்வர் குமாருக்கு டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை எனவும் ரசிகர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

புவனேஸ்வர் குமார் கடைசியாக ஆடிய சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். 7 போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் நான்காம் இடத்தை பெற்று இருந்தார். ஐபிஎல் தொடரில் கூட 16 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார் புவனேஸ்வர் குமார்.
அவரை முக்கிய வேகப் பந்துவீச்சாளராக அணியில் தேர்வு செய்யாவிட்டாலும் கூட மாற்று பந்துவீச்சாளராகவாவது தேர்வு செய்யலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. பும்ரா, முகமது ஷமிக்கு அடுத்து அதிக அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தான். ஆனால், அவருக்கு ஒருநாள் அணியை அடுத்து, டி20 அணியிலும் கூட இடம் அளிக்கப்படவில்லை என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.