மொஹாலி : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங் ஆறாவது வரிசையில் பேட்டிங் இறங்கி சாமர்த்தியமாக ஆடி, அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் பவுண்டரியாக அடிப்பார் என எண்ணிய ஆப்கானிஸ்தான் அணி அவர் ஆடிய ஆட்டத்தால் தவித்தது.
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. அடுத்து இந்தியா சேஸிங் செய்த போது ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். அதன் பின் சுப்மன் கில் அதிரடி ஆட்டம் ஆடி 12 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார்.

திலக் வர்மா நிதான ஆட்டம் ஆடி 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அதனால், ரன் ரேட் குறைந்தாலும், மறுமுனையில் சிவம் துபே பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை சீராக வைத்துக் கொண்டார். திலக் வர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 20 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். அவர் 13.5 ஓவரின் போது ஆட்டமிழந்தார். அப்போது ஆறாம் வரிசையில் ரிங்கு சிங் பேட்டிங் செய்ய வந்தார்.
அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 37 பந்துகளில் 42 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ரிங்கு சிங் பவுண்டரிகளாக அடிப்பார் என எண்ணி அவரைக் அவுட் ஆக்க பவுண்டரி அருகே பீல்டர்களை நிறுத்தியது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால், ரிங்கு சிங் முதல் பந்தில் பவுண்டரி அடித்த பின், தொடர்ந்து சிங்கிள் ரன்களாக எடுக்கத் துவங்கினார்.
அதை எதிர்பாராத ஆப்கானிஸ்தான் அணி அவரை தடுத்து நிறுத்த முடியாமல் தடுமாறியது. மறுமுனையில் சிவம் துபேவும் அதிரடி ஆட்டம் ஆடியதால் ஆப்கானிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் போராட்டத்தை கைவிட்டது. ரிங்கு சிங் 9 பந்துகளில் 2 ஃபோர் மற்றும் 8 சிங்கிள் ரன்கள் எடுத்து மொத்தம் 16 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஒரு பந்தை கூட வீணாக்காமல் அவர் ரன் சேர்த்த விதம் சாமர்த்தியமான டி20 ஆட்டமாக இருந்தது.
இந்திய அணி 17.3 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது, அபாரமாக ஆடிய சிவம் துபே 40 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிங்கு சிங்கும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். அவரது ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.